ஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா?
ஆடி மாதம் வந்தாலே புது மணத்தம்பதியர்களை பிரித்து விடுவார்கள். முன்னோர்கள் இப்படி செய்வதற்கும் ஒரு காரணம் உள்ளது.
சென்னை: தலை ஆடிப்பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பெற்றோர், புதிதாக திருமணம் செய்து கொடுத்த பெண்ணிற்கு புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து சீர் செய்து தங்களின் வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அதுவும் பெண் வீட்டார் சீர் செய்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்வது வாடிக்கை.
எந்த ஒரு காரியமும் காரணமின்றி நடக்காது. திருமணம் செய்து கொடுத்த பெண்ணை பிரித்து அழைத்து வருகிறார்கள் என்றார்கள் காரணம் இல்லாமல் இருக்குமா? எல்லாம் காரணத்தோடுதான் நடக்கிறது.

கர்ப்பம் மட்டுமே காரணமா?
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும். அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று சினிமாவில் வசனங்கள் பேசப்படுகின்றன.
கத்திரி வெயில் காலமான சித்திரையில் தலைச்சான் குழந்தை பிறந்தால் சீரழியும் என்றும், அதோடு தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையை பரப்பி விடுகின்றனர். இதற்காகத்தான் தம்பதிகளை பிரிக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சூரியன் - சந்திரன்
தகப்பனான சூரியன், தாயான சந்திரன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதிதேவதை சிவன். சந்திரனின் பிரத்யதி தேவதை கௌரி எனப்படும் பார்வதி.
அன்னையின் வீடு
இறைவன் அன்னை பார்வதியின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடக்கின்றன.
இணையும் மாதத்தில் பிரிவு
ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல என்றும் காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது.
ஆடித்தபசு
புராணங்களிலும் பார்வதி தேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த காலமாக ஆடி மாதம் சொல்லப்பட்டிருக்கிறது. இறைவனை நினைத்து அம்பிகை ஊசி முனையில் தவமிருந்த ஆடித்தபசு பண்டிகை சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கணவன் மனைவி ஒற்றுமை
அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும். கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து, கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.
மகளுக்கு சீர்
புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் என்றுகின்றனர்.
திருமணங்கள்
கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் திருமணங்களும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை என்கின்றனர் முன்னோர்கள். புரட்டாசி, மார்கழி மாதங்களிலும், இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக போற்றப்படுவதால் திருமணங்கள் நடைபெறுவதில்லை.
எல்லாம் நன்மைக்கே
புது மாப்பிள்ளைகளே... நம் முன்னோர்கள் செய்ததற்கும் ஒரு காரணம் உண்டு எனவே கவலைப்படாமல் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று ஜனகராஜ் போல கொண்டாடுங்கள்... அடுத்த பஸ்சிலேயே மனைவி வீட்டிற்கு திரும்பி வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.












Click it and Unblock the Notifications