சனிப்பெயர்ச்சி 2020-23: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விபரீத ராஜயோகம் வரும்
கும்ப ராசிக்காரர்களே... இதுநாள் வரை லாப சனியாக இருந்த சனிபகவான் இனி விரைய சனியாக அமரப்போகிறார். உங்கள் ராசிநாதன் உங்களுக்கு எப்போதுமே கெடுதல் செய்ய மாட்டார்.
சென்னை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியாலதனுசு மகரம் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். கும்ப ராசிக்கு இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் ஏழரை சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி, அவரே 12 ஆம் அதிபதி, ராசி அதிபதியுமாவார். 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம். கும்ப ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம். ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. இந்த சனிப்பெயர்ச்சி
காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி...பயப்பட தேவையில்லை
சனி பெயர்ச்சியால் பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. சனி பகவான் 12ஆம் வீட்டில் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். சனி பகவான் மகர ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் . வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.
சனிபகவானால் சந்தோஷம்
எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். குடும்ப ஸ்தானத்தை சனிபகவான் பார்வையிடுவதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும்.
பணம் விசயத்தில் கவனம்
பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் வரலாம். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.
கல்வியில் கவனம்
மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி மறதி வரலாம் ஞாபகசக்தி குறைவினால் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கவனம் தேவை. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். சனிபகவான் தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.