சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு பலன்கள்
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள். சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்று புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் பலன்களையும் பரிகார தலங்களையும் பார்க்கலாம்.
சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனிபகவான் இப்போது தனுசு ராசியில் இருக்கிறார். மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் ஜனவரி 24, 2020ஆம் தேதியன்று அமாவாசை திதியில், சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். இந்த ஐந்து ராசிக்காரர்கள் தவிர மற்ற 7 ராசிக்காரர்களுக்கு பாதிப்பா என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சனிப்பெயர்ச்சி 2020 : ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள்
குருவின் பார்வை புனர்பூசம்
மிதுனம், கடகம் ராசிகளில் உள்ளது புனர்பூசம், இந்த நட்சத்திரம் குருவின் அருள் பெற்ற நட்சத்திரம். மிதுனம் ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டமத்து சனி, கடகம் ராசியில் புனர்பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்டச்சனி காலமாக உள்ளது. அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நன்மை நடக்கும். திருமண தடைகள் நீங்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் புத்திரபாக்கியம் கிடைக்கும். சனிபகவான் இந்த நட்சத்திரகாரர்களுக்கு நன்மையைத்தான் செய்வார். பதவி உயர்வை கொடுப்பார் சனிபகவான். குருவின் பார்வையும் உங்க நட்சத்திரத்தின் மீது விழுவதால் நன்மையே நடக்கும்.
பாதிப்பு நீங்க பரிகாரம்
சனிபகவான் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு நகர்ந்தாலும் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும் உங்க ஆரோக்கியம் மேம்படும். உங்க பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். மிதுனம் ராசியின் மீது குருவின் பார்வை விழுவது போல சனி பகவானின் பார்வை கடகம் ராசியின் மீது விழுகிறது. பாக்ய ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் நன்மைகள் நடைபெறும். பகவான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியே கடக ராசி புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்தான். அஷ்டம சனி, கண்டச்சனியின் பாதிப்பு நீங்க வாணியம்பாடியில் எழுந்தருளும் அதிதீஸ்வரர் ஆலயத்தில் ஈஸ்வரனை வணங்கி நன்மை பெறலாம்.
ஆரோக்கியத்தில் அக்கறை
பூசம் அற்புதமான நட்சத்திரம். சனிபகவானின் நட்சத்திரம். சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் கடகம் ராசியில் உள்ள பூசம் நட்சத்திரத்தை பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்க உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அம்மா, அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். தாயாரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.
வருமானம் அதிகமாகும்
நான்காம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுவதால் தாயாரின் அன்பும் ஆசியும் கிடைக்கும். நீங்க செய்யும் செயலுக்கு மதிப்பு மரியாதை கூடும். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உங்க பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். உண்மையான பிரார்த்தனை வெற்றியை தேடித்தரும். சிவ ஆலயத்தில் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
Recommended Video
காதல் திருமணம்
ஆயில்யம் புதன் நட்சத்திரம். ஆயில்யம் நட்சத்திரம் அற்புதமான நட்சத்திரம் பயப்பட வேண்டாம். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சக்தியை தரக்கூடியதாக உள்ளது. சனியின் பார்வை ஏழாவது பார்வையாக உங்க ராசியின் மீது விழுகிறது. களத்திர ஸ்தான பார்வை என்பதால் தம்பதியர்களுக்கு நன்மை. தொழிலில் வெற்றி கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். திருமணம் முடிந்து குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். இந்த சனிப்பெயர்ச்சியால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். வாலாஜாபேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.