மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனிபகவான் - திருநள்ளாறில் பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு
சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பக்தர்கள் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டனர்.
திருநள்ளாறு: வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். திருநள்ளாறில் சனிகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனிபகவான் பரிகார தலங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
நவ கிரகங்களில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சஞ்சரிப்பார். 12 ராசிகளையும் அவர் மெதுவாக கடக்க 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்வார். இதன் காரணமாகவே அவர் மந்தன் என்று அழைக்கப்படுகிறார். சனீஸ்வரன் என்று அழைப்பதை விட சனைச்சரன் என்று அழைப்பதே பொருத்தமானது காரணம் சனிபகவானுக்கு ஒரு கால் லேசாக ஊனமாக இருக்கும். இதன் காரணமாகவே அவர் மிக மெதுவாக நடக்கிறார்.
தனுசு ராசியில் இருந்த சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்திருந்தாலும் புகழ்பெற்ற கோவில்களாக திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு ஆகிய சனி பரிகார ஆலயங்களில் வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது.
தனுசு ராசியில் இருந்து சனிபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சனிபகவான் பொதுவாக கோச்சாரப்படி 3,6,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் விருச்சிகம் ராசிக்கு 3வது வீட்டிலும், சிம்மம் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் மீனம் ராசிக்கு 11வது வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.
கொரோனா காலமாக இருப்பதால் அனைத்து ஆலயங்களிலும் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருநள்ளாறு நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது.
திருநள்ளாறு சனிபகவானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து கொண்டிருகின்றனர். இன்று நாள் முழுவதும் கோவில் திறந்திருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல குச்சனூர் சனிபகவான் ஆலயத்திலும், திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவானுக்கு சிறப்பு யாகங்கள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சனிபகவானை வழிபட்டனர்.
வட திருநள்ளாறு என்று போற்றப்படும் பொழிச்சலூர் சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். எள் தீபம் ஏற்றி சனிபகவானை பக்தர்கள் வழிபாடு நடத்தினார்.