இன்று சனி மகாபிரதோஷம் - 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்தால் கிடைக்கும் புண்ணியங்கள்
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.
சென்னை: இன்றைய தினம் சனி பிரதோஷம் 126 ஆண்டுகளுக்கு பிறகு மீனம் ராசி ரேவதி நட்சத்திரத்தில் வந்துள்ளது. தீபாவளியும், கந்த சஷ்டியும் முடிந்த சில நாட்களில் குரு தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்த உடன் நிகழும் இந்த சனி பிரதோஷம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.
சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும்.

அறிவுத்திறன் பெருகும்
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

அண்ணாமலையார் தரிசனம்
12 ராசிகளில் நீர் ராசிகள், நில ராசிகள் நெருப்பு ராசிகள், காற்று ராசிகள் என நான்கு விதமாக பிரித்துள்ளனர். மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நெருப்பு தத்துவத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. இந்த ராசிக்காரர்கள் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம் கன்னி மகரம்
பஞ்ச பூத தத்துவத்தில் நில தத்துவத்தை உணர்த்தும் ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம். இந்த ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், இந்த ஆலயத்தில் பிருத்வி லிங்கத்தை பிரதோஷ தினத்தில் வழிபட நன்மைகள் நடைபெறும். தோஷங்களும் பாவங்களும் விலகும்.

மிதுனம், துலாம், கும்பம்
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். காளகஸ்தியில் உள்ள திருக்காளத்தி நாதரை பிரதோஷ காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வழிபட புண்ணிய பலன்கள் கிடைக்கும். நோய் நொடிகள் தீரும்.

கடகம், விருச்சிகம், மீனம்
கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூத தத்துவத்தில் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். திருச்சி அருகே திருஆனைக்காவில் எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தான் நீர்தலம். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பிரதோஷ காலத்தில் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

சிதம்பம் நடராஜர்
ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜரை வழிபட வேண்டும். பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடலாம். பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபடுவது சிறப்பு. சனி மஹா பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வது ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications