சர்வ பாப விமோசனம் தரும் சனி மகா பிரதோஷம்....
சென்னை: சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.
இன்று சனிக்கிழமை. பிரதோஷ தினம்.இந்த நாளில் அதாவது சனி மகா பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.
ஐந்து வகைப் பிரதோஷம்:
1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாபங்களும் விலகும். புண்ணியங்களும் அதன் பலாபலன்களும் பெருகும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
ஆகவே, இந்த நாளில், மாலை வேளையில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் அமர்க்களப்படும். இதற்கான ஏற்பாடுகளை காலையில் இருந்தே செய்யத் துவங்கி விடுவார்கள் அர்ச்சகர்கள்.
நந்திதேவருக்கு குடம்குடமாக, பாலபிஷேகம் நடைபெறும். பிறகு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சகல பூக்களை அணிந்து கொண்டு, அழகுறக் காட்சி தருவார் ஸ்ரீநந்திதேவர். வழக்கமான பிரதோஷ தினத்தை விட, இன்று அனைத்து சிவாலயங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்வார்கள்.
வருடத்துக்கு மூன்று சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்தே வரும். இன்றைய தினம், சனிப் பிரதோஷமாக அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நாளில், மாலையில் சிவ பூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதன் சகல பாபங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களை பெறலாம்.












Click it and Unblock the Notifications