குருப்பெயர்ச்சி உற்சாகத்தில் சசிகலா - 64வது பிறந்தநாளுக்கு சிறையில் சிறப்பு விருந்து
சிறையில் உள்ள சசிகலாவிற்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி 64வது பிறந்தநாள் வர உள்ளது. சிறை கைதிகளுக்கு சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: புரட்டாசி மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி மீனம் ராசிக்காரர்களுக்கு டாப்பாக இருக்கும் என்றும் குறிப்பாக சசிகலாவிற்கு சூப்பராக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கிளப்பிவிடுகின்றனர். அது மட்டுமல்லாது ஆகஸ்ட் 18ஆம் தேதி சசிகலாவின் 64வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளார்களாம்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக தற்காலிகமாக பதவியில் அமர்ந்த சசிகலாவிற்கு முதல்வராக வேண்டும் என்று ஆசை வரவே, ஓ. பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். ஓபிஎஸ்சும் ராஜினாமா செய்து விட்டு திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார்.

இதன் விளைவாக சசிகலா பதவியேற்பு தள்ளிப்போனது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்று ஒன்றரை வருடங்கள் முடிந்து விட்டது. இந்த ஒன்றரை வருடங்களில் சசிகலா வாழ்க்கையில் எத்தனையோ சோக நிகழ்ச்சிகள் நடந்து விட்டன. அக்காள் மகன் மரணம், அண்ணியாரின் மரணம், கணவர் நடராஜனின் மரணம் என உறவினர்களின் மரணத்தினால் நொந்து போய் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் சசிகலாவை உற்சாகப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாம். குருப் பெயர்ச்சி சசிகலாவிற்கு சாதகமாக இருக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதே உற்சாகத்தோடு வரும் 18ஆம் தேதி சசிகலாவின் பிறந்தநாளை கொண்டாட உள்ளார்களாம்.
சசிகலா ராசி நட்சத்திரம்
குருபெயர்ச்சி உற்சாகம்
சசிகலாவுக்கு மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம். அக்டோபர் 11ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவான் இப்போது 8வது இடமான துலாம் ராசியில் இருக்கிறார். புரட்டாசி மாதத்திற்குப் பின்னர் 9ஆவது இடத்துக்கு வரப்போகிறார். இதனால் சசிகலாவுக்குச் செல்வாக்கு உயரும் என்றும் புதிய பதவி தேடி வரும் என்றும் எதிரிகள் ஒதுங்குவார்கள் என்றும் கூறுகின்றனர்.
விருச்சிக ராசியில் இடம் பெயரும் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து மீனம் ராசியை தனது 5வது பார்வையாக பார்க்கிறார். இது சிறப்பான அம்சமாகும். 7வது பார்வையாக ரிஷபம் ராசியையும், 9வது பார்வையாக கடகம் ராசியையும் பார்வையிடுகிறார் குருபகவான்.
சசிகலாவின் ராசியை பொருத்தவரை முயற்சி ஸ்தானமான 3வது இடம், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது இடத்தை பார்க்கிறார். இதன் மூலம் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும், கூடவே கை விட்டு போன சொத்துக்கள், பதவி, செல்வாக்கு கைகூடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சசிகலா.
தனது வெற்றிக்காக சிறையில் தினசரியும் முருகன் படத்தை வைத்து தினந்தோறும் மந்திரம் சொல்லி வழிபாடு செய்கிறாராம் சசிகலா. ஆடி அமாவாசை நாளில் விரதமும் இருந்தாராம். வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை சசிகலாவின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு இனிப்போடு கூடிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications