சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வெள்ளி வேல் - அதர்மம் ஒழிந்து நன்மை பெருகும்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வேல் வைக்கப்பட்டுள்ளதால் அதர்மம் ஒழிந்து நன்மை பெருகும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: தமிழ் கடவுள் முருகனிடம் உள்ள வேல் தீமையை அழிக்கும் சக்தி கொண்டது. சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் தீமை அழியும் நன்மை பெருகும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.
ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் நேற்று வரை தீர்த்த கலசம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் அந்த தீர்த்த கலசம் அகற்றப்பட்டு வெள்ளி வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த வெள்ளிவேலை திருநெல்வேலியை சேர்ந்த பெண் பக்தர் சந்திர புஷ்பம் என்பவர் வைத்துள்ளார்.

ஆண்டவர் உத்தரவுப்பெட்டி
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூஜித்தால் என்ன பலன்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது.

முருகனின் அருள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பும், செம்பும் வைத்து பூஜை செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் செம்மண் வைத்து பூஜை செய்ய உத்தரவிடப்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஒரு பையில் செம்மண் வைத்து பூஜை செய்யப்பட்டது. நிலம் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

விவசாயி கனவில் முருகன்
அக்டோபர் மாதம் இறுதியில் செம்மண் அகற்றப்பட்டு 3 கதிர் அரிவாள் வைத்து பூஜை செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுங்கிலியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 80 வயதான விவசாயி பி.வேலுச்சாமி என்பவர் முருகன் தனது கனவில் வந்து கூறியதாக கூறினார். இதையடுத்து பூ போட்டு பார்த்து கதிர் அரிவாள்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்பட்டது.

பெண் கனவில் வெள்ளி வேல்
கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் நேற்று வரை தீர்த்த கலசம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் அந்த தீர்த்த கலசம் அகற்றப்பட்டு வெள்ளி வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த வெள்ளிவேலை திருநெல்வேலியை சேர்ந்த பெண் பக்தர் சந்திர புஷ்பம் என்பவர் வைத்துள்ளார். இந்த வெள்ளி வேல் சுமார் 1 அடி உயரத்தில் உள்ளது.

பெண் பக்தரின் கனவில் உத்தரவு
கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெண் பக்தரின் கனவில் முருகன் வந்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெள்ளி வேல்வைத்து பூஜை செய்ய ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு கோவில் எங்கு உள்ளது என்று தெரியாது. அதன் பின்னர் பிறரிடம் கேட்டும், பத்திரிகைகளில் வந்த தகவலை அறிந்தும் கோவிலுக்கு வழங்கும் வெள்ளி வேலை செய்துள்ளார். கோவிலுக்கு வந்து சாமி சன்னிதியில் பூ போட்டு உத்தரவு கேட்டார். அவருக்கு வெள்ளைப்பூ வந்து ஆண்டவன் உத்தரவு கிடைத்தது. அதன் பின்னரே ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெள்ளிவேல் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது என்று கோவில் அர்ச்சகர் தெரிவித்தார்.

முருகன் வேலின் சக்தி
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் கையில் உள்ள ஆயுதமான சக்தி வேல் தீமையை அளிக்கும். அதை உணர்த்தும் வகையிலேயே தற்போது வேல் வைத்து பூஜை செய்யப்படுவதாக சிவாச்சாரியர்களும், பக்தர்களும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications