அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பூவனநாதர்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் தரிசிக்கவிருப்பது கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது.
தலச் சிறப்பு:
இத்திருக்கோயில் அம்மன் செண்பகவல்லி என்ற பெயரில் ஏழு அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். இறைவன் பூவனநாதர் என்ற பெயரில் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
இத்திருத்தலத்தில் இறைவன் தோன்றிய களாமரமே இன்றும் உயிர் மரமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவிழா உற்சவ மூர்த்திகள் சந்நிதியின் முன்புறம் அமைந்துள்ள இத்தல விருட்சத்தினை சுற்றி கருங்கல்லினால் மேடை அமைக்கப்பட்டு அதில் ஒரே பீடத்தில் விநாயகர், நாகர்கள், நந்தியுடன் சுவாமி, அம்மன், சாஸ்தா ஆகிய திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயில் தீர்த்தமானது அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். எனவே இது அகத்திய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
புராணச் சிறப்பு:
சங்கன், மதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனை பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் எனப் பெயர் பெற்றார். ஈசன் திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன் செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை மலை நோக்கி பயணமானார், வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வனன் ஆகியோரை வதைத்ததனால் உண்டான பிரம்மஹத்தி தோசம் நீங்க அகத்தியர் பொன்மலை களாவனத்தில் எழுந்தருளியுள்ள பூவனநாதரைப் பூஜித்து தோஷம் நீங்கப் பெற்றார்.
பொன்மலை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தார். வெள்ளிமலை சிவகுழு உறுப்பினர் வாமனன் என்பவன் நந்திதேவர் சாபத்தால் வெம்பக்கோட்டையில் வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றார். இறைவன் அவர் கனவில் தோன்றி உரைத்த ஆணைப்படி பூவனநாதருக்கு கோயில் அமைத்து சாப நிவர்த்தி பெற்றார். செண்பக மன்னரால் aதோற்றுவிக்கப்பட்டதால் இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள்.
தனிச் சிறப்பு:
இங்கு நின்ற நிலையில் இருக்கும் அம்பாளை அமர்ந்த நிலையில் இருப்பது போல் அலங்காரம் செய்வார்கள். இந்த அமைப்பு இங்கு மட்டுமே
நடக்கும் தனி சிறப்பு:
இறைவன்: அருள்மிகு பூவனநாதர்
இறைவி: அருள்தரும் செண்பகவல்லி அம்மன்
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம்
தலவிருட்சம்: களா மரம்