ஆடிப்பெருக்கு நாளில் காவிரி தங்கைக்கு சீர் வரிசை கொடுத்த ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பிலும் காவிரி தாய்க்கு ஆடிப்பெருக்கு தினத்தன்று மங்கல பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது தொன்று தொட்டு மரபாக இருந்து வருகிறது.
திருச்சி: நம்முடைய வீட்டில் திருவிழா என்றால் சகோதரிகளுக்கு சீர் வரிசை எடுத்துக்கொடுப்பது வழக்கம். காவிரியை தங்கையாக பாவிக்கும் ஸ்ரீரங்கம் பெருமாள் ஆடிப்பெருக்கு நாளில் பட்டுப்புடவை, தாலி, மஞ்சள் குங்குமம்,மலர்மாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக வழங்கினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் சீர் வரிசை அளிக்கும் நிகழ்ச்சி ஆடிப்பெருக்கு தினமான நேற்று சிறப்பாக நடைபெற்றது.
கர்நாடகத்தின் குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் காவிரி ஆறு பூம்புகார் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழக மக்களால் தாயாக வணங்கப்பட்டு வருகிறாள் காவிரி.
முட்டித்தள்ளும் நிதி நெருக்கடி.. இம்ரான்கான் வீட்டை வாடகைக்கு விடப்போகிறார்களாம்.. பாக்.அரசு அதிரடி
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையேயும் நேற்றைய தினம் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
நம்பெருமாள் சீர் வரிசை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18ஆம் நாள் அல்லது ஆடிப்பெருக்கு நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அப்போது பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ரங்கவிலாஸ் மண்டபம்
இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் ஆடி 18 அன்று நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காவிரி தாயருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
காவிரிக்கு சீர்
ஆடிப்பெருக்கு தினமான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் அங்கிருந்தபடியே காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சியும், வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
காவிரிக்கு பட்டுப்புடவை
அண்ணன் நம்பெருமாள் தங்கை காவிரிக்கு கொடுத்த சீர் வரிசை பொருட்களை தலையில் சுமந்து வந்த கோவில் நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்தடைந்தனர். மாலை, புடவை, தாலி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை காவிரி நீரில் சமர்பித்தனர். இதனையடுத்து நம்பெருமாள் ரங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஏழுமலையான் பட்டு வஸ்திரம்
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் சார்பாக கொடுக்கப்பட்ட பட்டு வஸ்திரம், பழம் மற்றும் மங்கள பொருட்கள் ஆடிக்கிருத்திகை அன்று இரவு திருத்தணி முருகனுக்கு வைக்கப்பட்டது. ஏழுமலையானின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து முருகனுக்கு அளித்தார்.
முருகனுக்கு சீர் வரிசை
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா திங்கட்கிழமை நடைபெற்றது. திருத்தணி முருகனுக்கு, திருப்பதி பெருமாள் சீர் கொடுக்கும் சிறப்பு வைபவம் நேற்று நடந்தது. இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் திருததணிக்குச் சென்றனர்.
ஊர்வலமாக வந்து சமர்ப்பணம்
ஏழுமலையான் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் தட்டுகளில் பல விதமான பழங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களுக்கு, திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் மேள தாளம் முழங்க சிறப்பு மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாளின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.