ஸ்ரீரங்கம் நவராத்திரி தாயார் திருவடி சேவை : குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் ஸ்ரீரங்கநாச்சியர் தரிசனம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவத்தின் ஏழாம் நாளான இன்று ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் திருவடி சேவையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாச்சியார் திருவடி சேவை தரிசனம் நடைபெற்றது. உற்சவர் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். அலங்கார ரூபினியாக எழுந்தருளிய தாயாரை பக்தர்கள் பரவத்துடன் தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் திருவடி தரிசனத்தைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குறியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்த ஆலயத்தில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6ஆம் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி உற்சவர் ரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பேமிலி கூட ஓட்டு போடலைன்னு கலாய்க்கிறாங்க.. பொய் செய்தியால் பாஜக வேட்பாளர் மனஉளைச்சல்; பரபர பேட்டி
உற்சவத்தின் 5ஆம் நாளான ஞாயிறன்று உற்சவர் ரங்கநாச்சியார் ரத்தின கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கநாச்சியார் தரிசனம்
ரங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ஆம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
திருவடி தரிசனம்
இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி ரங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். கொலு, இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைகிறது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
கமலவல்லி நாச்சியார் பாத தரிசனம்
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அந்தவகையில் நவராத்திரி 5ஆம் நாளான ஞாயிறன்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது. உற்சவர் கமலவல்லி தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார்.
நாச்சியாரின் அலங்காரம்
கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருஆபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை, தோடா சிலம்பு அணிந்திருந்தார். பின்னர், நவராத்திரி மண்டபத்தில் திருவடி தெரிய எழுந்தருளினார். அங்கு அவருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதன் பின்னர் தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பக்தர்கள் ஏமாற்றம்
தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. உறையூர் கமலவல்லி நாச்சியாரின் திருவடி சேவையை தரிசிக்க பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.