ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் கோலாகல தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்: பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சத்தையும் மீறி ஏராளமான பக்தர்கள் இந்த தெய்வீக திருக்கல்யாண நிகழ்வினை கண்டு தரிசனம் செய்தனர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் வடபத்ரசாயி பெருமாள். இது ஆண்டாள் அவதார தலமாகவும், பெரியாழ்வார் அவதார தலமாகவும் போற்றப்படுகிறது.

கண்ணனையே கணவனாக பாவித்து மாலை சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள். அந்த கண்ணனையே கணவனாகவும் அடைந்தார். இந்த நிகழ்வினை இன்றைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் நிகழ்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ஆண்டு திருக்கல்யாண விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பங்குனி உத்திர தினமான நேற்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
மாலை 3 மணிக்கு திருக்கல்யாண விழா தொடங்கியது. முறைப்படி பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன் ஆண்டாள், ரங்கமன்னார் இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications