பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் - பட்டு வஸ்திரம் அனுப்பிய ஏழுமலையான்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் பங்குனி உத்திர நாளான நாளைய தினம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் பரிசாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் பங்குனி உத்திரநாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. மணப்பெண்ணாக மாலை சூடப்போகும் ஆண்டாள் அணிவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் 90வது தலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில். மூலவர் வடபத்ரசாயி எனப்படும் ரெங்க மன்னர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
ஆண்டாள் அவதரித்த இத்தலத்தில்தான் சூடிக்கொடுத்த நாச்சியாள் என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது.

கோதை நாச்சியாள்
கோதை என்றும் ஸ்ரீஆண்டாள் என்றும் திருநாமங்களால் வணங்கப்படும் சாட்சாத் ஸ்ரீதேவியின் அம்சமாகிய பூமி பிராட்டியார், ''அரங்கன்தான் என் மணாளன், அதில் மாற்றம் இல்லை'' என்று உறுதியாக இருந்த ஆண்டாள், மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதமிருந்து கண்ணனையே தன் பதியாக அடைந்தாள்.

பங்குனி உத்திரத்தில் திருமணம்
ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாள், பங்குனி உத்திர நன்னாளில் திருவரங்கத்தில், 'ரங்கநாதா' என்று கூறியபடி கருவறைக்குள் சென்று ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள். ஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்துப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி ஆண்டாளை பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டதால், இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனித் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பானது.

ஏழுமலையான் பட்டு வஸ்திரம்
மணக்கோலம் காணப்போகும் ஆண்டாள் அணிவதற்காக பட்டு வஸ்திரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது. ஆடிப்பூர கொட்டகையில் இன்றைய தினம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டு வஸ்திரங்களை ஏழுமலையான் கோவில் நிர்வாகிகள் ஆண்டாள் கோவில் நிர்வாகிகளிடம் பட்டு வஸ்திரங்களை அளித்தனர்.

ரங்கமன்னாரை மணமுடிக்கும் ஆண்டாள்
இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளினர். பங்குனி உத்திர தினமான நாளைய தினம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்காக ஆடிப்பூர கொட்டகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று காலை செப்புத்தேரோட்டமும் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications