தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018 - அமிர்தமிருத்யுஞ்சய ஹோமம்,அதிருத்ர பெருவேள்வி
விருச்சிக ராசியில் குரு அமரும் பொழுது தாமிரபரணி நதியில் மகாபுஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கான கொடியேற்றம் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி: குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகராசிக்கு இடம் பெயர்ச்சி அடையும் நாளான புரட்டாசி 25ஆம் தேதியன்று தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் விழா முறப்பநாடு சப்தரிஷி தீர்த்தத்தில் மகாகணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி, தமிழ்நாட்டிலேயே கலக்கக்கூடிய ஒரே வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஆறு திகழ்கிறது. தாமிரபரணி ஆறானது தமிழ் வளர்த்த அகத்தியர் முனிவர் வாழ்ந்த பொதிகை மலையின் சமவெளிப்பகுதியில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையிலான 124 கி.மீ தூரம் பயணித்து கடலில் சங்கமிக்கிறது. இதில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில்தான் தற்போது தாமிரபரணி மகாபுஷ்கரம் விழா நடைபெறுகிறது.
தாமிரபரணி மகா புஷ்கரணி என்றால் பிரமகலசத்தில் இருந்து வரும் நீர் என்று பொருளாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரமகலசம் 12 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் இருப்பதாகவும், இந்த விழாவின்போது தாமிரபரணி ஆற்றில் நீராடினால் பொதுமக்கள் நலம்பெறுவர் என்று கூறப்படுகிறது.

விருச்சிகத்தில் குருபகவான்
விருச்சிக ராசிக்கு உரிய நதி தாமிரபரணி. குருப்பெயர்ச்சி காலமான அக்டோபர் 11ம் முதல் 22ம் தேதி வரையிலான 12 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சுமார் 2 கோடி மக்கள் மகாபுஷ்கரணி விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருவேள்வி
மகாபுஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும் ஹோமமும், வேள்வியும் நடைபெற உள்ளது. ஆறு நாட்கள் அமிர்த மிருத்யுஞ்ஞய ஹோமம் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்கலாம். புஷ்கர விழாவின் நிறைவாக நான்கு நாட்கள் அதிருத்ர பெருவேள்வி நடைபெற உள்ளது.

மன அமைதி தரும் வேள்வி
குருபகவான் பிரவேசிக்கும் இந்த புண்ணிய காலத்தில் நீராடி ஹோமங்களில் பங்கேற்பதன் மூலம் தொழில் முன்னேற்றம், மன அமைதி கிடைக்கும்.
தாமிரபரணி நதிக்கரையில் நவகைலாயம், நவதிருப்பதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. புண்ணிய நதியான தாமிரபரணியை மகா புஷ்கரணி விழாவின் மூலமாக தூய்மையாக வைப்பதற்கு சாதி, சமய, இண வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என அகில இந்திய துறவிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தாமிரபரணிக்கு ஆரத்தி
மகா புஷ்கர விழா நடைபெறும் நாட்களில் மாலை நேரங்களில் தாமிரபரணி அன்னைக்கு மங்கல ஆரத்தி நடைபெறுகிறது. தீப ஆரத்தியில் சங்கல்பம் செய்து உபயதாரராக பங்கேற்கலாம். பொருள் தானம், அன்னதானம் வழங்கலாம். ஸ்ரீதாமிரபரணி மகாபுஷ்கர விழா கமிட்டி முறப்பநாடு, தலைவர் திரு விவேகம் ஜி. ரமேஷ், செயலாளர் பிஎஸ்கே மாரியப்பன், பொருளாளர் கே கே ஜி இளங்குமரன், மேலும் தகவல்களுக்கு முத்துக்குமார் 9940879669, பி.கள்ளபிரான் 9894767323, எம் பாலமுருகன் 9791455941.












Click it and Unblock the Notifications