குரு பெயர்ச்சி தாமிரபரணி மகாபுஷ்கர விழாவிற்காக புதிய கல் படித்துறை
முறப்பநாடு தாம்ரபர்ணீ புஷ்கர கல் படித்துறை அமைக்கும் பணியை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி: ஸ்ரீ தாம்ரபர்ணீஸ்வரம் டிரஸ்ட் சார்பில் முறப்பநாட்டில் நடக்க இருக்கும் ஸ்ரீ தாமிரபரணி மஹா புஷ்கர நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராட வசதியாக கல் படித்துறை அமைக்கும் பணியை திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
புஷ்கரம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. 'மகாபுஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும்.

குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார். குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி. அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன.

ஸ்ரீ தாம்ரபர்ணீஸ்வரம் டிரஸ்ட் சார்பில் முறப்பநாட்டில் அக்டோபர் 11 முதல் 24 வரை 14 நாட்கள் தாமிரபரணி மஹா புஷ்கரப்பெருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. விழாவை முன்னிட்டு நங்கைமுத்தம்மன் கோயில் படித்துறை அருகில் கூடுதலாக 150 அடிக்கு புதிய கல் படித்துறை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து கருங்கல் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய கல் படித்துறை 150 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டதாக அமையும். மொத்த கல் எடை 500 டன் ஆகும். காரைக்குடி ஸ்தபதி மணிகண்டன் கல் படித்துறை அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளார்.
இந்த கல்படித்துறை அமைக்கும் பணியை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பூஜைகள் செய்து மலர் தூவி தொடங்கி வைத்தார்கள். பின்னர் புஷ்கர விழா நடைபெறும் இடங்களை பார்வையிட்ட அவர், தாம்ரபர்ணீ மஹா புஷ்கர விழா நடத்துவதற்கு ஏற்ற இடமாக முறப்பநாடு அமைந்துள்ளது என்றும், மஹா புஷ்கர விழாவில் தானும் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாம்ரபர்ணீஸ்வரம் டிரஸ்ட் நிர்வாக டிரஸ்டி முத்துகுமார், டிரஸ்டிகள் சுபத்ரா, கள்ளபிரான், பாலமுருகன், தாம்ரபர்ணீ மஹா புஷ்கர பெருவிழா கமிட்டி தலைவர் விவேகம் ரமேஷ், செயலாளர் பி.எஸ்.கே மாரியப்பன் பொருளாளர் இளங்குமரன், நிதிக்குழு தலைவர் சங்கரசுப்ரமணியன், கமலக்கண்ணன் மற்றும் ஊர் பிரமுகர் ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications