தஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : 40 அடி உயர பர்மா தேக்கில் புதிய கொடி மரம்
மதுரை: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வரும பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று பழைய கொடி மரம் அகற்றப்பட்டது. பின்பு, புதிய கொடிமரம் அமைப்பதற்காக சென்னையில் இருந்து சுமார் ரூ.9 லட்சம் மதிப்பில் 40 அடி உயரமுள்ள பர்மா தேக்கு மரம் வரவழைக்கப்பட்டது. தற்போது, கொடி மரத்தை வடிவமைக்கும் பணியில் மதுரையைச் சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் 20 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் கோவில் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில். கி.பி.1000ஆவது ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதோடு அறிவியல், விஞ்ஞானம், கலை மற்றும் பண்பாட்டு பொக்கிஷமாக கருதப்படுகிறது.
இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது புதிய கொடிமரம் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட கொடிமரம் காலப்போக்கில் சேதமடைந்தது.
இதன் பின்னர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் கி.பி.1801ஆம் ஆண்டில், புதிய கருங்கல்லால் பீடம் அமைக்கப்பட்டு, கி.பி.1814ஆம் ஆண்டில் பழுதடைந்த கொடிமரத்தை நீக்கிவிட்டு, புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு நிறுவப்பட்டது. ஆனால், இக்கொடி மரமும் காலப்போக்கில் சேதமடைந்தது. இதனால் கடந்த 2003ஆம் ஆண்டில், மீண்டும் புதிய கொடிமரம் நிறுவப்பட்டு அதற்கு மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, கொடி மரத்தில் இருந்த பித்தளை கவசத்தை புனரமைப்பு செய்வதற்காக கடந்த ஜனவரி 2ஆம் தேதி கழற்றப்பட்டு மெருகூட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடி மரத்தை பாதுகாத்து வந்த கவசத்தை தனியே பிரித்தபோது, கொடிமரமும் முழுவதும் சேதமடைந்திருப்பது தெரியவந்தது.
தை முதல் செவ்வாய் : நாட்டரசன் கோட்டையில் களைகட்டிய நகரத்தார் பொங்கல்
இதையடுத்து, புதிதாக கொடி மரம் தயாரித்து நிறுவ கோவிலின் அறங்காவலர் குழு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று பழைய கொடி மரம் அகற்றப்பட்டது. பின்பு, புதிய கொடிமரம் அமைப்பதற்காக சென்னையில் இருந்து சுமார் ரூ.9 லட்சம் மதிப்பில் 40 அடி உயரமுள்ள பர்மா தேக்கு மரம் வரவழைக்கப்பட்டது. தற்போது, கொடி மரத்தை வடிவமைக்கும் பணியில் மதுரையைச் சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் 20 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிய கொடி மரத்தின் அடிப்பகுதியான பிரம்ம பாகம் மற்றும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம் தலா நான்கரை அடி உயரத்திலும், மேற்புறமான ருத்ர பாகம் இருபத்து எட்டரை அடி உயரத்திலும் தயார் செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் அனைத்துமே பழைய பாரம்பரிய முறைப்படியே உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய கொடி மரம் உருவாக்கும் பணிகள் அனைத்தும் இன்னும் 1 வாரத்திற்குள் முடிக்கும் வகையில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த உடனே, புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு, மெருகூட்டப்பட்ட பித்தளை கவசம் மீண்டும் பொருத்தப்படும்.