திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பந்தக்கால் நடுதலுடன் தொடக்கம் - பக்தர்கள் பங்கேற்பு
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காரைக்கால்: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிபெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும்.
மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

சனிபகவான்
புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் உள்ளது. இங்கு சனிகிரகத்தின் அதிபதியான சனிபகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவது சனிப்பெயர்ச்சி ஆகும். அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

திருநள்ளாறில் விழா
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இதனையொட்டி நடைபெறும் பந்தக்கால் நடும்விழா அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருச்சிகம் டூ தனுசு
சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிப்பதால் தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்களுக்கு வசதி
திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களுக்காக போதுமான அளவில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியும், தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் உள்பகுதி, வெளிப்பகுதி, நளன்குளம் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் மொத்தம் 125 கண்காணிப்பு கேமராக்கள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சியின் போது மேலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

அன்னதானம் செய்ய தடை
இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியின்போது, பாதுகாப்பு கருதி தனியார் அன்னதானம் மற்றும் வேறு பொருட்களை தருவது தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

சனிபெயர்ச்சி
திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன் அருளாட்சி செய்கிறார். இங்கு சென்று ஒரு நாள் தங்கி வழிபடுவது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள். சனிப் பெயர்ச்சிக்கு பல லட்சம் பேர் வழிபட வருவதால் அன்று செல்ல முடியாதவர்கள் பதினைந்து நாள் முன்போ, பின்போகூட செல்லலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications