திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா நவ. 8ல் கொடியேற்றம் - 13ல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 13ஆம் தேதி பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
Recommended Video

தூத்துக்குடி: சூரனை வதம் செய்த சுப்ரமணியர் அருள்பாலிக்கும் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா நவம்பர் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 13ஆம் தேதியன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
புரட்டாசி மாதம் விஜயதசமி நாளில் குலசேகரப்பட்டினத்தில் மகிசாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவும் அதையொட்டி சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. முத்தாரம்மன் மகிசனை சம்ஹாரம் செய்த பின்னர் சூரனை வதம் செய்கிறார் சுப்ரமணியர்.

இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா சில தினங்களுக்கு முன்பு முடிந்துள்ளது. திருச்செந்தூரில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது.
நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். பக்தர்கள் காப்புக்கட்டிக்கொண்டு சஷ்டி மண்டபத்தில் விரதத்தினை தொடங்குவார்கள்.
முதல் 5ஆம் திருநாள் வரை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
நவம்பர் 13ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். விரதம் இருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தினை முடித்துக்கொண்டு கடலில் நீராடிவிட்டு சாப்பிடுவார்கள்.
நவம்பர் 14ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், பின்னர் 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதலும் நடைபெறும். மாலை 6.30க்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றுதல், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும்












Click it and Unblock the Notifications