வாலாட்டி குருவியை பார்த்தால் காதல் ஜெயிக்கும்... புதையல் கிடைக்கும் - வராஹமிகிரர்
வாலாட்டிக்குருவிகள் பற்றி வராஹமிகிரர் பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சியத்தில் எழுதியுள்ளார். படிக்க படிக்க சுவாரஸ்யமான தொகுப்பு அது. நீங்களும் படிங்களேன்.
மதுரை: வாலாட்டி குருவிகளை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. நகரங்களில் வசிப்பவர்களுக்கு வாலாட்டி குருவி எப்படி இருக்கும் என்றாவது தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இன்றைக்கு கிராமங்களில் பல நிறங்களில் வாலாட்டி குருவிகளை பார்க்க முடிகிறது. கறுப்பாகவும், மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்திலும், வெள்ளை, கறுப்பு கலந்த நிறத்திலும் வாலாட்டி குருவிகளைப் பார்த்து மனது ஆனந்தப்படும் அதே நேரத்தில் நல்லதாகவும், கெட்டதாகவும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கான காரணத்தை 1500 ஆண்டுகளுக்கு முன்பே தனது பிருஹத் சம்ஹிதா என்ற நூலில் கணித்து எழுதியுள்ளார் வராஹமிகிரர். வாலாட்டி குருவியை எந்த இடத்தில் பார்த்தால் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நம் நாட்டில் இன்றைக்கும் சகுனம் பார்த்து பல காரியங்கள் செய்கின்றனர். பூனை குறுக்கே போனால் சகுனத்தடையாக நினைக்கின்றனர். அதே போல பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் படித்து அதன்படி பல காரியங்களில் முடிவு எடுக்கின்றனர். கிளி ஜோதிடம் பார்த்து எதிர்காலத்தை தெரிந்து கொள்பவர்கள் இன்றைக்கும் பலர் இருக்கின்றனர்.
காகம் கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்று சொல்கின்றனர் அதே போல பண்டைய காலத்தில் வராஹமிகிரர் என்ற ஜோதிட கணிதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காக்கை முட்டையிட்டு 5 குஞ்சு பொறித்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளார். அவர்தான் வாலாட்டி குருவிகளை எங்கே பார்த்தால் என்ன நடக்கும் என்று கணித்துள்ளார். அதில் சுவாரஸ்யமாக பல தகவல்கள் உள்ளன மேற்கொண்டு படியுங்கள்.
அதிசார குரு பெயர்ச்சி 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள், பரிகாரங்கள்
நல்ல சகுனங்கள்
புனித ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகிய இடங்களில் நின்று கொண்டு இருக்கும் வாலாட்டி குருவிகளைப் பார்த்தால் நல்லதே நடக்கும். பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்த பறவைகளைப் பார்ப்பது நல்ல சகுனம் என்கிறார் வராஹமிகிரர்.
காதலன் காதலி கூடுவார்கள்
வாலாட்டி குருவிகள் ஆடு, செம்மறி ஆட்டின் முதுகில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காதல் கைகூடும். காதலன், காதலி உடனே சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. வண்டல் மண்ணில் பறவையைப் பார்த்தால் அன்றைக்கு நல்ல சுவையான உணவு கிடைக்கும். மாட்டுச் சாணத்தின் மீது நின்றிருக்கும் பறவைகளைப் பார்த்தால் பால், தயிர், வெண்ணெய் கிடைக்கும்.
கெட்ட சகுனம்
புல்தரையில் நின்று மேய்ந்து கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் பட்டுத்துணிகளும், ஆடைகளும் கிடைக்குமாம். அதே நேரத்தில் வண்டிகள் மீது நின்று கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் நாட்டுக்கு சேதம் ஏற்படுமாம், வீட்டுக்கூரை மீது நின்றிருக்கும் பறவைகளைப் பார்த்தால் செல்வ இழப்பு ஏற்படும். தோல் முதலிய பொருட்களின் மீது நின்று கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் சிறைவாசம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் குடிக்கும் குருவிகள்
வாலாட்டிக் குருவிகளை சாம்பல், எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது, சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில் பார்த்தால் கெட்ட செய்திகளே வரும் அதே நேரத்தில் தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும்.
ஆசைகள் நிறைவேறும்
வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர். அந்த குருவிகளை முதலில் பார்த்தால் அன்றைய தினம் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும். முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும். மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.
புதையல் கிடைக்கும்
வாலாட்டிக் குருவிகள் மலஜலம் கழிக்கும் இடத்தில் தோண்டினால் நிலக்கரி கிடைக்கும் புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும். உணவைக் கக்கும் இடத்தில் மைகா, அபிரகம் கிடைக்கும் என்கிறார் வராஹமிகிரர்.
பரிகாரம் உண்டு
இன்றைக்கு கறுப்பு வெள்ளை கலந்த வாலாட்டு குருவிகளை பார்த்து விட்டோமே, கழுதை மீது அமர்ந்து இருந்த குருவிகளை பார்த்து விட்டோமோ ஏதேனும் கெட்ட செய்தி வருமோ என்று கலங்க வேண்டாம். எல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும்; எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கும். அதே போல எல்லா பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு என்று வராஹமிகிரர் சொல்லுகிறார், நாம தீய சகுனங்களை கண்டாலும், உடனே பிராமணர்களையும் குருவையும் புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் இருந்தாலோ தீமைகள் நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.