வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி மட்டுமல்ல அந்த கிருஷ்ணரும் கூடவே இருப்பார்
துளசி செடியில் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
சென்னை: கிருஷ்ணருக்கு பிடித்தது துளசி. துளசி மகாலட்சுமியின் அம்சம். துளசி மாலை கிருஷ்ணருக்கு பிடித்தமானது. எனவேதான் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் துளசி மாலை கொண்டு செல்கின்றனர். அங்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். துளசி தீர்த்தம் அரு மருந்தாக திகழ்கிறது.
பகவான் கிருஷ்ணர் துளசி மாலை அணிந்திருப்பார். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கிருஷ்ணர் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவர் எனவேதான் கிருஷ்ணர் துளசிமாலை அணிந்து கொள்கிறார்.
வீடுகளில் துளசிமாடம் அமைப்பதன் மூலம் பூச்சிகள் நுழையாமல் தடுக்கலாம். வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடுவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளை மட்டுமல்ல பகவான் கிருஷ்ணரின் அருளையும் பெறலாம். பகவான் கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும்.
சனிப்பெயர்ச்சி 2020-23: சனியால் சந்தோஷம் - யாருக்கு சங்கடம் யாருக்கு
ஏன் துளசி பிடிக்கிறது
திருமால் தன் மனைவி லட்சுமியுடன் வைகுண்டத்திலுள்ள நந்தவனத்தில் உலா வருவார். அங்கு மலர் செடிகளுக்கு நடுவே ஒரு துளசி செடி இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வரும் திருமால், துளசி செடி வந்ததும் அதன் அருகே நின்று கொள்வார். துளசியின் சிறப்பு பற்றி லட்சுமியிடம் எடுத்துச்சொல்வார். 'லட்சுமி! இந்த துளசி, அமிர்தத்துக்கு நிகரானது. இதற்கு மரணம் என்பதே இல்லை. இதை நான் மிகவும் விரும்புகிறேன். எத்தனை மாலை அணிவித்தாலும், துளசிமாலை அணிவித்தால் தான் நான் மகிழ்வேன். இதை அணிந்தால் தான் எனக்கு அழகு என்று புகழ்வார்.
துளசியின் மகிமை
ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். மிகப்பெரிய தராசு கொண்டு வரப்பட்டது. ஒரு தட்டில் கிருஷ்ணர் அமர்ந்தார். சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. கிலோ கணக்கில் தங்கம் வைரம் வைத்தும் கிருஷ்ணர் இருந்த தட்டு கீழே வரவில்லை. அதே நேரத்தில் ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
நரம்பு மண்டலம்
துளசி மிகவும் பழமையான மூலிகைககளில் ஒன்று. நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அருமருந்தாக திகழ்கிறது.
துளசியை உண்பதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தலைவலியை போக்கும் துாக்கமின்மையை கட்டுப்படுத்துகிறது.
மகிழ்ச்சி அதிகரிக்கும்
துளசியில் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் பதற்றம் தணியும் மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது. துளசி சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக பரவ வழிசெய்கிறது. எனவே இதன் மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும். துளசி தோலுக்கு சிறந்த மருந்தாகும். தோலில் உள்ள அழுக்கு அசுத்தங்கள், முகப்பரு ஆகியவற்றை நீக்குகிறது.
மருத்துவ குணம்
துளசியை உட்கொள்வதால், காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவையும் குணப்படுத்துகிறது. இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. மகாலட்சுமி வாசம் செய்யும் துளசியை வீட்டில் வளர்த்தால் செல்வ வளம் சேருவதோடு ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது உண்மைதானே.