குலம் காக்கும் குல தெய்வம்... கையெடுத்து கும்பிட்டா காத்து நிற்கும்!
கிராமங்களில் சிறு தெய்வங்களாக இருக்கும் குல தெய்வங்கள்தான் வம்சத்தை வழி வழியாக காக்கும் கடவுள்கள். குலதெய்வத்தின் துணையிருந்தால் வாழ்க்கை கடலை சிரமமின்றி நீந்தலாம்.
- மயூரா அகிலன்
சென்னை: குலதெய்வம் நமது குலத்தை காக்கும் தெய்வம். நமது முன்னோர்களே குலதெய்வங்களாக இருந்து நம்மை வழி நடத்துகின்றனர். அந்த புண்ணிய ஆத்மாக்களை நாம் வழிபடுவதன் மூலம் எந்த கஷ்டத்தையும் எளிதில் கடந்து விடலாம். எனவேதான் எத்தனையோ கடவுள்களை வணங்கினாலும் குல தெய்வத்தை மனதால் நினைத்து கும்பிடாவிட்டால் நினைத்த காரியம் எதுவும் நடக்காது என்பது இன்றைக்கும் கிராமங்களில் வழிவழியாக நம்பப்படுகிறது.
தெய்வங்களாகி விட்ட பித்ருக்களே ஒருவரின் குலத்தை வழிநடத்துகிறார்கள். குலதெய்வம் என்பது நமது தந்தை, நமது பாட்டன், முப்பாட்டன் என்ற பரம்பரைச் சங்கிலியில் முதல் கண்ணியாகும். குல தெய்வங்கள் கிராமங்களையே இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் மரபோடு நீங்காத உறவு கொண்டு விளங்குகின்றன. குல தெய்வத்தை வழிபட்டால் கோடி நன்மை உண்டு என்ற பழமொழி இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது எனவேதான் திருப்பதி போகும் போது கூட குலசாமிக்கு என காணிக்கை முடிந்து வைத்து விட்டு செல்வது நடைமுறையாக உள்ளது.
ஒருவரின் குலம் யாரால் உருவானதோ எவரால் தொடங்கப் பட்டதோ அந்தப் புனித ஆத்மாவையே அந்தக் குலத்தின் தெய்வமாக நாம் வணக்குகிறோம். எங்கிருந்து நமது பரம்பரை வாழத் தொடங்கியதோ அந்த இடத்தில்தான் நமது குலதெய்வக் கோவிலும் இருக்கும்.
சில சமுதாயத்தினர் குலதெய்வ வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையே நடத்துகின்றனர். தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு. குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.
கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.
சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, பூக்கட்டிப் போட்டு பார்த்தல் மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.
ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்னைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாத குற்றம் காரணமாக இருக்கும். அதேபோல கிரகங்களின் நல்ல பலன்களும் முழுமையாக ஒருவருக்கு பலன் தர வேண்டுமென்றால் குலதெய்வ அனுக்கிரகம் மிக முக்கியமாகத் தேவை. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.
குலதெய்வ வழிபாடு குலத்துக்கு குலம் மாறுபடுகிறது. ஒரேஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டுமுறைகள் மாறுபடுகின்றன. குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் நம்பியவர்க்கு தர்மராசா... நம்பாதவருக்கு எமராசா என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.
பெரும்பாலும் குலதெய்வ கோயில்கள் பெரிய கோயிலாக இருக்காது. சிறிய அளவிலேயே இருக்கும் ஒவ்வொரு குடுபத்தினருக்கும் ஒரு தெய்வம் குல தெய்வமாக இருக்கும். மாசி மாதத்தில் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பகையை மறந்து ஒற்றுமையாக குலதெய்வத்தை வணங்குவார்கள். மாசி மகாசிவராத்திரி அன்றும் அடுத்த நாள்களிலும் குலதெய்வ வழிபாடு தமிழத்தில் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக வெளியூர்களில் நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் குலதெய்வத்தைக் காண வருவார்கள். அதே போல பங்குனி உத்திரம் தினத்தன்றும் தென் மாவட்டங்களில் குலதெய்வத்தை வணங்குவது மரபு. அய்யனார், சாஸ்தா கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும்.
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து குலதெய்வத்தை வணங்குவதன் மூலமே அந்த மகாசக்தியின் அருளை முழுமையாகப் பெற முடியும். குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் பங்காளிகளுக்குக்கிடையில் கருத்து வேற்றுமைகள் சண்டை சச்சரவுகள் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தனித்தனியாக பிரிந்து மூலைக்கு ஒருவராகப் பிரிந்து நின்று குலதெய்வத்தை வணங்குவது சிறிதும் பலன் தராது.
இதுபோன்ற நிலைமைகள் குடும்பத்தில் வரக்கூடாது, அண்ணன் தம்பிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதும் குலதெய்வ வழிபாட்டில் மிக முக்கியமான விஷயம் என்பதால் வருடம் ஒருமுறை குலதெய்வத்தை வணங்க வரும்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை அதற்கு முன்னதாகவே தீர்வு காண்பது நல்லது.
தீர்வு காண சிக்கலாக இருக்கும் பிரச்னைகளை குலதெய்வத்தின் முன் வைத்து பிரச்னைகளுக்கு உள்ளானவர்கள் அங்கே ஒன்றுகூடி குலதெய்வத்தின் அருள்வாக்கினைப் பெற்றோ அல்லது சீட்டுக் குலுக்கிப் போடுவது வெள்ளைப் பூ சிகப்புப் பூ முறைகளைப் பயன்படுத்தியோ குல தெய்வ ஆசியினால் அனைத்துப் பிரச்னைகளையும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன. ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என் பது பல ஊர்களில் நடை முறையில் உள்ளது.
ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம்.
குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது என்பதும் நம்பிக்ரக. குல தெய்வம் யார் எதுவென்று தெரியாதவர்கள் வியாழக்கிழமைகளில் குருஓரையில் காலபைரவரை வணங்கி குல தெய்வத்தை தெரிவிக்கும் படி வேண்டிக்கொள்ளலாம். வாசகர்களே... உங்களின் குல தெய்வத்தின் பெருமைகளையும் புகைப்படத்துடன் எழுதுங்கள். பிரசுரிக்கிறோம்.