திரும்பி வந்துட்டேனு சொல்லு.. விருச்சிக ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் சூப்பர் மாற்றம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 ஆம் தேதி, இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். விருச்சிக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகி சனி பகவான் ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். பஞ்ச ஸ்தானம், லக்ன ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகிய இடங்களில் சனி பகவான் பெயர்ச்சி ஆவது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை தான் கொடுக்கும். அந்த வகையில் இது விருச்சிக ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கும் பொற்காலம்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம்
பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் முற்றிலும் விலகி, அதன் மூலம் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். சகோதரர்களிடையே இருந்த சண்டைகள் தீரும். உடலில் இருந்த நோய்கள் விலகி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் குழந்தைகளின் உடல் நலத்தில் இருந்த பிரச்னைகளுக்கும் இந்த காலத்தில் தீர்வு கிடைக்கும்.
சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம்
சொந்த வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வண்டி, வாகனம் ஆகியவற்றை சர்வீஸ் செய்து புதுப்பிக்கும் காலம் இருக்கும். பூர்வ ஜென்ம சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. வெளிநாடு, வெளி மாநில பயணங்களால் ஆதாயம் உள்ளது.
கடன் தீரும்
கடன் சுமை குறையும். பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். ஆய்வாளர்களுக்கு இந்த காலம் மிக சிறப்பாக இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட காலமாக திட்டமிட்ட புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த காலம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
திருமண யோகம்
சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். அதேபோல திருமண தடைகள் நீங்கி, இந்த காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது. இந்த காலத்தில் காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்துக்கு செல்லும்.
மதிப்பெண்
தொழில், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 90 சதவீதம் சிறப்பாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இதயம் மற்றும் வயிற்று பகுதிக்கு இடைபட்ட பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கையை கவனித்து சரியாக வழிநடத்த வேண்டும்.
பரிகாரம், வழிபாடு
நரசிம்மர் கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications