கும்பம் ராசிக்கு சுத்து போடும் உறவுகள்.. செவ்வாய் பெயர்ச்சியில் டபுள் வார்னிங்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசியினர் வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி கும்பம் ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்கு செவ்வாய் பகவான் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். அதாவது செவ்வாய் பகவான் களத்ர ஸ்தானத்துக்கு வருகிறார். பல நல்ல மாற்றங்கள் இருக்கும். உத்யோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் நிவர்த்தியாகி திறமைக்கேற்ற அங்கீகாரம், எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும்.
உத்யோகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பணி மாற்றத்துக்கு முயற்சி செய்வோருக்கு எதிர்பார்த்தபடியான நல்ல உத்யோகம் கிடைக்கும். பணம் வரவு இருக்கும். பொருளாதாரத்தில் சீரான ஏற்றம் கிடைக்கும். வாழ்க்கையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான பல நல்ல அனுபவங்கள் கிடைத்து மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
அதேநேரத்தில் பிரச்னைகளும் இருக்கவே செய்யும். உணர்ச்சிப்படுவதை கட்டுப்படுத்தவும். உணர்ச்சிவசத்தால் தடுமாற்றம் ஏற்பட்டு தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை துணையுடன் மோதல், தொழில் கூட்டாளிகளுடன் மோதல் என்ற மன அமைதி பாதிக்கும்.
உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் தான் பிரச்னை அதிகம் உருவாகும். உடன் பணியாற்றுவோரிடம் கவனமாக பேச வேண்டும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தாயுடனும் மனக்கசப்பு உண்டாகும். எதிரிகள் பலம் பெறுவார்கள். வம்பு, வழக்குகளில் கவனமாக இல்லையென்றால் உங்கள் எதிரிகளுக்கு சாதகமாகும் வாய்ப்புள்ளது.
கூடா நட்பு, தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதால் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயம் அவமானம், மரியாதை குறைவு என்று உங்களின் கௌரவத்துக்கு சிக்கல்கள் ஏற்படும். நிலம் சார்ந்த முதலீடுகளால் சங்கடம் ஏற்படும். எனவே முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பூர்வீக சொத்து என்றால் பிரச்னை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்திலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நெருங்கிய உறவுகள் கூட உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. எனவே உரிய ஆவணங்கள், சாட்சிகளுடன் பணம் கொடுக்கல் வாங்கலை கையாள வேண்டும்.
இந்த காலத்தில் யாரையும் நம்ப வேண்டாம். இளைய சகோதர உறவுகளுடன் மோதல் ஏற்பட்டு பகை உண்டாகும். எனவே குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. முடிந்தவரை சகோதர, சகோதரி உறவுகளிடம் விலகி இருப்பது இந்த காலத்தில் பல பிரச்னைகளை தவிர்க்க உதவும்.












Click it and Unblock the Notifications