செவ்வாய் பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கு உத்யோகத்தில் சூப்பர் மாற்றம்.. ஆனால் அந்த இரண்டு விஷயம்
சென்னை: தை மாதத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் பெயர்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை பார்த்து வருகிறோம். இந்த தொகுப்பில் ரிஷபம் ராசிக்கு ஏற்படும் பலன்களை காணலாம்.
செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். சுக்கிரன் பெயர்ச்சியுடன், செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். செவ்வாயை பூமி காரகன் மற்றும் சகோதர காரகன் என்றும் சொல்வார்கள். செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் நற்பயன்களை கொடுப்பார். பத்தாம் இடத்தில் சுமாராகவும் 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் செவ்வாய் வந்தால் சற்று பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

செவ்வாயுடன் சனி சம்பந்தப்பட்டால் உலகளவு பேரழிவு ஏற்படும். இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடகம் ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுனம் ராசியில் இருக்கப் போகிறார்.
ரிஷபம் ராசிக்கு செவ்வாய் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டு அங்கிருந்து பின்னோக்கி இரண்டாம் இடத்துக்கு வக்கிர கதியில் வரவுள்ளார். செவ்வாய் இரண்டாம் இடத்துக்கு வருவதால் குடும்பம், தனம், வாக்கு ஆகிய மூன்று அமைப்புகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒரு காரியத்தை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டாலும் சில சமயம் அது நடைபெறாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் தேவை இல்லாத விவாதங்கள் வந்து செல்லும். வாழ்க்கை துணையுடன் இணக்கமான சூழல் இருக்காது. வாழ்க்கை துணைக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
அதேநேரத்தில் சில நற்பயன்களும் கிடைக்கவுள்ளது. சமூகத்தில் நீங்கள் அவமானப்பட்ட இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் உருவானாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. எதிரிகள் பலவீனமாவார்கள். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். வருவாயில் எந்தக் குறைவும் இல்லாத வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு என உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் கோபம், பதற்றம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்தே எதிரிகள் அதிகரிப்பார்கள். உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். இந்த பதற்றத்தால் தொழிலில் சிறு சிறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே முடிந்தளவுக்கு கோபத்தை குறைப்பது நல்லது.
குடும்பத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தவிர்ப்பது நல்லது. கடனால் அவப்பெயர் வரும். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அதனால் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் நடவடிக்கையால் சற்று கவலை ஏற்படும். குழந்தைகளிடம் கோபத்தை தவிர்த்து அன்பாக கொண்டு செல்ல வேண்டும்.
சமூகத்தில் பெரிய மனிதர்களுடனான தொடர்பால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். சொன்ன விஷயத்தை சொன்னபடி காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள். பொய் பேசுவதை தவிர்ப்பதால் சில நேரம் அவமானங்களையும் தவிர்க்க முடியும். யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம்.
குடும்பத்தில் வீண் விரயம் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணை ஆரோக்கியத்துக்காக செலவு அதிகமாக இருக்கும். எனவே அதில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். குரு வக்கிரம் நிறைவடைவதால் சில நன்மைகள் உண்டு. சிவ பெருமான் வழிபாடு, சுந்தர காண்டம் வாசிப்பது மன அமைதியை ஏற்படும்.












Click it and Unblock the Notifications