சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு - யாருக்கு குறி?
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றில் இருந்து செம்பு, அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர்: காங்காயம் அருகில் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றில் இருந்து அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.
திருவண்ணாமலையை சேர்ந்த கென்னடி என்பவரின் கனவில் செம்பு அம்பு உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றில் இருந்து அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி என்ற பெண் பக்தரின் கனவில் கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது. இதனையடுத்து கணக்கு நோட்டு வைத்து பூஜைக்கப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி வரிமுறை கடுமையானது. பினாமி சொத்துகள் மீட்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடைபெற்றன.
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிளகு, அருகம்புல், கீழாநெல்லி வைத்து பூஜை செய்யப்படுகிறது. வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தைச் சேர்ந்த சென்னிமலை என்பவருக்கு இந்த உத்தரவு கிடைத்து.
இம்முறை அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது யாருக்கான குறி என்று சிவன்மலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேசிக்கொள்கின்றனர்.