தசராவதி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பிகை பீட கும்பாபிஷேகம் - ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் கோலாகலம்
ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தசராவதி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்பிகைக்கு இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செங்கல்பட்டு: ஈச்சங்கருணை அடுத்த திருவடிசூலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தசராவதி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்பிகைக்கு இன்று திங்கட்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
திருவடிசூலம் ஈச்சங்கரணையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு சன்னதியாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. அவற்றில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது.

பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள இங்குள்ள தியான மண்டபம் பக்தர்கள் மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலுடன், "பைரவமே சுவாசம்" என்பதை உள்ளத்தில் உறுதி பட உணரச்செய்யும் சிறப்புடன் திகழ்கிறது.
இந்த ஆலயத்தின் ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு கட்டிட அமைப்பில் இருப்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய சிறப்புடைய இத்தலத்துக்கு மேலும் மெருகு ஏற்றும் வகையில் தற்போது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது.
குபேர செல்வத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த சன்னதி உள்ளது. அங்கு குபேர குடமும், அஷ்ட லட்சுமிகளும் உள்ளனர். ஸ்ரீகனகதுர்க்கை, ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீபைரவர் பாதரட்சை மண்டபம், ஸ்ரீமகாநந்தி ஆகியவையும் தனித் தனி சன்னதியாக அமைத்துள்ளனர்.

இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள தசராவதி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்பிகை கோவிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 17.12.2020 மாலை 7:00 மணி அளவில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. காலை 9:00 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா இனிதே துவங்கியது. 18.12.2020 காலை 8:00 மணி அளவில் லக்ஷ்மி ஹோமம் நடைபெற்றது.

19ஆம் தேதி முதலாம் கால யாக பூஜையும், 20.12.2020 காலை 8:00 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை 6:00 மணி அளவில் ரசஷாபந்தனம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று காலையில் நான்கு மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7 மணியளவில் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications