Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா?

வைகாசி மாதம் ரிஷப ராசியில் சூரியன் பயணிப்பதால் ரிஷப மாதம் என்றழைப்பார்கள். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகாசி மாதம் ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் நீராடல் பூரணத்வமானது என விஷ்ணு ஸ்மிருதி சிறப்பாகக் கூறுகிறது. சிறப்பான இந்த மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் "மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. சித்திரை மற்றும் கத்திரி வெயிலுக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. சுகபோகத்தைத் தரும் சுக்கிரனின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் இந்த மாதத்தில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தினர் நம் முன்னோர்கள். வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. முருகனின் அவதார தினமாக வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட வைகாசி மாத ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.

வைகாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷத்தில் ராகு... ரிஷப ராசியில் சூரியன், புதன்... துலாம் ராசியில் கேது... கும்பத்தில் செவ்வாய், சனி... மீனத்தில் குரு, சுக்கிரன் என சஞ்சாரம் செய்கின்றன. வைகாசி மூன்றாம் தேதி செவ்வாய் மீனத்திற்கு இடம் பெயர்கிறார். ஒன்பதாம் தேதி சுக்கிரன் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறுகிறார். இருபதாம் தேதி புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.இருபத்தி ஒன்றாம் தேதி சனி பகவான் வக்கிர கதியில் செல்கிறார்.

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
வைகாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதனும் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். இந்த அமைப்பு அரசாங்க வேலை கிடைக்கச் செய்யும். குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும். புதன் வக்கிரகதியில் பின்னோக்கி சென்றிருக்கிறார். அறிவுத் திறனால் காரியங்கள் சாதிப்பீர்கள். உங்கள் ராசியிலேயே ராகு இருக்கிறார். பணவரவு எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பதினோராம் இடத்தில் செவ்வாய் சனி இணைவு. வீட்டு மனைகளைப் புதுப்பிக்கும் யோகத்தைக் கொடுக்கும். தொழிலுக்கான முதலீட்டுப் பணம் கிடைக்கும். இருபத்தி ஒன்றாம் தேதி சனி வக்ரம் அடைகிறார். நிலம் வாங்குவீர்கள். வண்டி வாகன யோகம் ஏற்படும். புதன் இருபதாம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். வியாபாரத்துக்கு உறுதுணையாக இருக்கும். மூன்றாம் தேதி மீனத்திற்கு மாறுகிறார் செவ்வாய். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குரு பகவான் 12-ம் இடத்தில் இருக்கிறார். இடம் விட்டு இடம் மாறும் வாய்ப்பு ஏற்படும். ஏழாம் இடத்தில் இருக்கும் கேது அலைச்சலை ஏற்படுத்துவார். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கிடைக்காது.

 ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
வைகாசி மாதத்தில் வசந்தங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். பன்னிரண்டாம் வீட்டில் இருக்கிறார் ராகு.பெரியோர்களின் ஆசியால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உங்கள் ராசியில் சூரியனும் புதனும் இணைந்திருக்கிறார்கள். 20ஆம் தேதி புதன் வக்கிர நிவர்த்தி ஆகிறார். அரசாங்க வேலைகள் மளமளவென்று நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும். 6-ஆம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார். இனம்தெரியாத எதிர்ப்புகள் மனதை வருத்தும். உள்ளத்து உறுதியால் அதில் இருந்து மீண்டு வருவீர்கள் பத்தாம் இடத்தில் செவ்வாயும் சனியும் அமர்ந்திருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இருபத்தி ஒன்றாம் தேதி வக்ரகதி அடையும் சனி அலைச்சலையும் உடல் சோர்வையும் கொடுப்பார். பதினோராம் இடத்தில் குருவும் சுக்கிரனும் அமர்ந்திருக்கிறார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஒன்பதாம் தேதி மேஷத்திற்கு மாறும் சுக்கிரன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார். 21ஆம் தேதி சனி வக்கிர கதி அடைகிறார். கட்டுமானத் தொழில் சிறப்பாக நடக்கும். ரியல் எஸ்டேட் தொழில் தன லாபத்தை அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
பன்னிரண்டாம் இடத்தில் சூரியனும் புதனும் இருக்கிறார்கள். தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள். அரசாங்க வேலை பார்ப்போர் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தக் காலக்கட்டத்தில் ஞாபக மறதி அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை கைவிடுங்கள். ஒன்பதாமிடத்தில் செவ்வாயும் சனியும் இருக்கிறார்கள். 3 ஆம் தேதி செவ்வாய் பத்தாம் இடம் செல்கிறார். உலோக விற்பனை லாபம் கொழிக்கும்.பெட்டிக்கடை வியாபாரிகள் கெட்டிக்காரத்தனமாக தொழில் செய்வார்கள். புதன் வக்கிரகதியில் இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவீர்கள். மருந்து வியாபாரம் அமோகமாக நடக்கும்.வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். தனியார்துறை ஊழியர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவார்கள். ஐடி ஊழியர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் பெரும் பயன் அடைவார்கள். ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கேது. பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசி அன்பர்களே...
வைகாசி மாதத்தில் கணிசமான பலனை காணப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு சொந்த வீட்டில் இருக்கிறார். படிப்படியாக கடந்த கால நெருக்கடிகள் குறையும். பல வழிகளில் பணவரவு கிடைக்கும். எட்டாம் இடத்தில் இருக்கும் செவ்வாய் வைகாசி மூன்றாம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு மாறுகிறார். நீண்டகாலமாக இழுபறியில் இருந்த நிலத்தை வாங்குவீர்கள். சொந்த வீட்டை அழகுபடுத்துவீர்கள். எட்டாம் இடத்தில் இருக்கும் சனிபகவான் இருபத்தி ஒன்றாம் தேதி வக்கிரம் அடைகிறார். மருத்துவச் செலவுகள் வரும். உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ராகு 10ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.. 11ஆம் வீட்டில் சூரியன் இருக்கிறார். கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரிசியன்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். நீண்டநாளாக வராமல் இருந்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். கேது 4-ஆம் வீட்டில் இருக்கிறார். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். தாயார் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகலாம். சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
இந்த மாதத்தில் சீரான பலனை அனுபவிக்கப் போகிறீர்கள்.உங்கள் ராசிநாதன் 10-ஆம் வீட்டில் பலமாக அமர்ந்திருக்கிறார். புதிய முதலீடுகள் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வங்கிகள் மூலம் கடன் வசதியைப் பெறுவீர்கள். சந்திரனின் சஞ்சாரம் உயர்வான பலனையே தருகின்றது. செவ்வாயும் சனியும் ஏழாம் இடத்தில் இருக்கிறார்கள். மூன்றாம் தேதி செவ்வாய் எட்டாம் இடத்திற்கு மாறுகிறார். குடும்பத்தில் பிரச்சினை தோன்றி மறையும். திருமணப் பேச்சுவார்த்தை இழுபறியாகும்.பத்தாம் வீட்டில் இருக்கும் புதன் பலவகையில் நன்மை செய்வார். பங்குப் பரிவர்த்தனை சிறப்பாக நடக்கும். அரசுத் துறையினர் அமோகமான பலனைப் பெறுவார்கள். குருபகவான் எட்டாமிடத்தில் இருக்கிறார். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் இருப்பது கஷ்டத்தைக் கொடுக்காது. ஏழாம் இடத்தில் இருக்கும் சனிபகவான் இருபத்தி ஒன்றாம் தேதி வக்கிர கதி அடைகிறார். இரும்புத் தொழில். உணவுத்தொழில்,மணல் வியாபாரம் போன்றவை சிறப்பாக நடக்கும். ஒன்பதாம் இடத்தில் இருக்கும் ராகு திடீர் பண வரவுகளை உண்டாக்குவார். கேது மூன்றாமிடத்தில்.எந்தச் சவாலையும் தைரியமாகச் சந்திப்பீர்கள்.

கன்னி

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
இதுவரை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வந்தீர்கள். இனி திருப்புமுனை உண்டாகி நன்மையைப் பெறப் போகிறீர்கள். ராஜ கிரகமான சூரியன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். புதிய வீடு கட்டி குடி அமர்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். 6-ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் 3ஆம் தேதி ஏழாம் இடத்திற்கு செல்கிறார். இழுபறியாக இருந்த திருமணப் பேச்சுவார்த்தை ஈடேறும். குடும்பத்தில் சின்னச் சின்ன மனவருத்தங்கள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துப் போய் அதைச் சரி செய்யுங்கள். ஒன்பதாம் வீட்டில் இருக்கும் புதன் உங்களுக்கு சாதகமான பலன்களையே வழங்குவார். புதிய தொழில் தொடங்குவீர்கள். ஏழாம் இடத்தில் ஆட்சி பலத்தோடு அமர்ந்திருக்கிறார் குரு. தடைபட்ட வருமானங்கள் தாராளமாக வர ஆரம்பிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கமிஷன் வியாபாரம் கணிசமான லாபத்தை தரும். எட்டாம் இடத்தில் சுக்கிரனும் ராகுவும் இருக்கிறார்கள். வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். கேது இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜீரண மண்டலப் பிரச்சனை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உண்டு‌. முறையாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
இந்த மாதத்தில் துடிப்பான பலன்களைப் பார்க்க போகிறீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார். எதிலும் நிதானமாக நடக்க வேண்டும். அரசாங்க வேலையில் தடை ஏற்படும். வாக்குத் தவறினால் தலைகுனிவு உண்டாகும். மனைவியின் மனதைக் காயப்படுத்தாதீர்கள். ஐந்தாம் இடத்தில் இருக்கும் செவ்வாய் ஆறாம்
வீட்டிற்கு மாறுகிறார். எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள்.பெட்டிக்கடை. டீக்கடை. நடைபாதை வணிகம் அமோகமாக நடக்கும். 6-ஆம் இடத்தில் இருக்கும் குரு தொழில் ஸ்தானத்தையும் விரய ஸ்தானத்தையும் வாக்கு ஸ்தானத்தையும் 5 7 9 பார்வைகளால் நோக்குகிறார். தொழிலில் இருந்த மந்த நிலை விலகும். நீண்ட காலம் விலை போகாமல் இருந்த நிலம் விற்கும். நல்ல நண்பர்களின் ஆலோசனை கை கொடுக்கும். 6-ஆம் இடத்துக்கு செல்லும் செவ்வாயும் அனுகூலமான பலனைத் தருவார். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார். மாணவர்கள் படிப்பில் அக்கறையாக இருக்க வேண்டும். ஞாபக மறதியால் வேலைகள் தடங்கலாகும். சனி பகவானும் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். ஒன்றாம் இடத்தில் கேதும் ஏழாம் இடத்தில் ராகும் குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்குவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
வைகாசி மாதத்தில் வித்தியாசமான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார். தள்ளிப்போன மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வேற்றுமைகள் அகலும். அரசாங்க வேலைகள் தாமதமின்றி நடக்கும். சந்திரனின் நகர்வுகளும் உங்களுக்கு யோகமான பலன்களைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். நான்காம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மூன்றாம் தேதி ஐந்தாம் இடத்திற்குச் சென்று குருவோடு இணைந்து குரு மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார். அரசு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வெற்றிகரமாக லாபம் பார்ப்பார்கள். ஊழியர்கள் முதலாளிகளின் கருணைப் பார்வையால் மனம் மகிழ்வார்கள். ஏழாம் இடத்தில் இருக்கும் புதனும் உங்களுக்கு ஏற்றத்தைத் தருவார். புத்திசாலித்தனத்தால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். அரசு ஒப்பந்தம் போடுவீர்கள். ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கிறார். இது அமோகமான பலன்களை அள்ளித்தரும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் பல மடங்காக அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் ஆதாயமடைவீர்கள்.

தனுசு

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
இந்த மாதத்தில் தடையில்லாப் பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். சூரியன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். உங்களுடன் இருந்தே உடைசல் கொடுக்கும் உறவுகளை அடையாளம் காண்பீர்கள். தொழிலுக்குத் தடையாக இருந்த இடையூறுகளைக் கிள்ளி எறிவீர்கள். செவ்வாய் 3ஆம் தேதி நான்காம் இடத்திற்குச் செல்கிறார். தோப்புக் குத்தகை மூலம் கணிசமான வருமானம் பார்ப்பீர்கள். கடைகள் கட்டி வாடகைக்கு விடுவீர்கள். ஐந்தாம் இடத்தில் புதன் அமர்ந்திருக்கிறார். தாய் மாமன் வழியில் சங்கடங்கள் வரலாம். சாதுரியமாக அதைச் சமாளிப்பீர்கள். குரு பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்குப் பங்கம் ஏற்படுத்த மாட்டார். நான்காம் வீட்டில் இருந்த சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். வெளியூர்ப் பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். சனிபகவான் இருபத்தி ஒன்றாம் தேதி வக்ரகதி அடைகிறார். வளமான பல நன்மைகள் ஏற்படும். ஐந்தாம் இடத்தில் இருக்கும் ராகு பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட வழி வகுப்பார்.11-ஆம் இடத்து கேது வருமானத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
இந்த மாதத்தில் மகத்தான பலன்களைப் பெறப் போகிறீர்கள். ஐந்தாம் இடத்தில் சூரியனும் புதனும் இணைந்து இருக்கிறார்கள். அரசாங்கத் தேர்வு எழுதுவதற்கு ஏற்ற காலம். கல்லூரிப் பேராசிரியர்கள் பெருமை அடைவார்கள். குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். இரண்டாம் இடத்தில் இருந்த செவ்வாய் மூன்றாம் இடத்திற்குச் செல்கிறார். கடினமான வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். சகோதர உறவுகள் உதவியாக இருக்கும். குரு பகவான் 3-ஆம் இடத்திலிருந்து உங்கள் கனவுகளை நனவாக்குவார். எதிர்ப்புகளை முறியடிப்பார். அசாத்தியமான தைரியம் கொடுப்பார். நான்காம் இடத்தில் சுக்கிரன். இரு மனங்கள் இணையும். காதல் கைகூடி வரும். திருமணப் பேச்சுவார்த்தை நடக்கும். சனி 2-ம் இடத்தில் இருக்கிறார். வார்த்தையை அளந்து பேச வேண்டும். தேவையில்லாத விவாதங்கள் வேண்டாம். நான்காம் இடத்து ராகு ஆரோக்கியத்தைக் கெடுக்க வைப்பார். வெட்டியாக வெயிலில் அலையாதீர்கள். மன உளைச்சல் ஏற்படும். கேது தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். வியாபாரத்தை விருத்தி செய்ய கடுமையாகப் போராட வேண்டும். உபரிப் பாக விற்பனை முன்னேற்றம் காணும்.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
வைகாசி மாதத்தில் குதூகலமான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள் மூன்றாம் இடத்தில் இருக்கும் சூரியன் வேகத்தையும் விவேகத்தையும் தந்து தொழிலில் வெற்றி பெற வைப்பார் நீண்டகாலமாக தடைபட்டிருந்த காரியம் நடக்கும். புதன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். போட்டி பந்தயங்கள் சாதகமாக முடியும். புதிய தொழில்களில் முதலீடு செய்வீர்கள். குருபகவான் 2-ம் இடத்தில் இருக்கிறார். பல வகையில் பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். சனி ஜென்மத்தில் இருக்கிறார். வாக்கிலும் நாக்கிலும் கவனம் தேவை. வார்த்தை தவறினால் அவமானம் வந்து சேரும். ராகு மூன்றாம் இடத்தில் இருக்கிறார் சகோதர வகையில் நன்மை உண்டாகும் உறவுகளுக்குள் உண்டான சங்கடங்கள் நீங்கும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து இருக்கிறார். தந்தையார் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்த்தவர்கள் பலம் இழந்து போவார்கள். தொழிலில் இருந்த போட்டிகளை களை எடுப்பீர்கள். ஏழரைச் சனியால் சில பாதிப்புகள் உண்டாகி பின்னர் சரியாகும்.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாக கொண்ட மீனராசி அன்பர்களே... இந்த மாதத்தில் மிதமான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். சூரியன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆரோக்கியம் மேம்பட அதிக செலவு செய்வீர்கள். பொருட்களைப் பத்திரமாக வைத்திருங்கள். திருட்டுப் போவதற்கான வாய்ப்பும் உண்டு. சந்திரனின் சஞ்சாரம் ஏற்ற இறக்கமான பலன்களையே தரும். பன்னிரண்டாம் இடத்தில் இருந்த செவ்வாய் 3ஆம் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். கட்டுமானத் தொழிலில் தடை ஏற்படும். வேலையாட்கள் பற்றாக்குறையால் வியாபாரத்தில் சுணக்கம் காணும். வக்ர கதியில் இருக்கும் புதன் வாக்குத் தவற வைப்பார். பணி இடங்களில் பணிந்து நடக்க வேண்டும். அரசு வேலையில் அவசரம் காட்டக்கூடாது. ஜென்மத்தில் இருக்கும் குரு தொழிலுக்குத் தடையை ஏற்படுத்துவார். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாகும். சனிபகவான் 12-ம் இடத்தில் இருக்கிறார். தேவையில்லாமல் கோபத்தை உண்டாக்குவார். நிதானம் ரொம்ப முக்கியம். ஆயுள் ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார்‌. மூட்டு வலி, கழுத்து வலி, கால் வலி என அவதி உண்டாகும். இரண்டாமிடத்தில் ராகு நிற்கிறார். எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவீர்கள். தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்துங்கள்.


உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+