மழைக்காக வருண யாகம் : சிவனுக்கு ருத்ராபிஷேகம் விஷ்ணுவுக்கு திருமஞ்சனம் - அறநிலையத்துறை ஆணை
வெப்பம் தணிந்து மழை பெய்ய கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் மற்றும் ருத்ராபிஷேகமும், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: பொய்த்துப்போன பருவமழையால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கார்ப்பரேசன் தண்ணீர்தான் பிரச்சினை கேன்களில் தண்ணீர் விற்பனை கன ஜோராக நடக்கிறது. புயலால் மழை வரும் என்ற கணிப்பும் காணமல் போகவே நன்றாக மழை பெய்ய வருண யாகமும், சிவபெருமானுக்கு சீதள கும்பம் மற்றும் ருத்ராபிஷேகமும், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2019 - 20ஆம் ஆண்டு ஸ்ரீவிகாரி வருடத்தில் நல்ல பருவ மழை பெய்து நாடு செழிக்க முக்கியத் திருக்கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள திருப்புன்கூர் சிவன் திருக்கோயிலில் உள்ள மகாநந்திக்கு மாகபிஷேகம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாடுகளை கோயில் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு கற்றறிந்தவர்களை தேர்வு செய்து செய்ய வேண்டும் என்றும் இந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மழைக்காக வேள்வி
பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் நந்திப் பெருமானுக்கு நீர்த் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை தரும் அமிர்தவர்ஷினி
ஓதுவார்களைக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயானரின் ஏழாம் திருமறையையும் திருஞானசம்பந்தரின் 12 திருமறையில் தேவார மழைப் பதிகத்தையும் பாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை வேண்டி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஷ்ணுவுக்கு திருமஞ்சனம்
சிவபெருமானுக்கு சீதள கும்பம் மற்றும் ருத்ராபிஷேகமும், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மழை வேண்டி பதிகங்கள் ஓத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பால், தயிர் இளநீர் அபிஷேகம்
மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம், வருண சூக்த வேத மந்திர பாராயணம், வருண காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்டவைகளை செய்து வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நந்திக்கு மகா அபிஷேகம்
நாகை மாவட்டத்தில் உள்ள திருப்புன்கூர் சிவன் திருக்கோயிலில் உள்ள மகாநந்திக்கு மாகபிஷேகம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாடுகளை கோயில் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு கற்றறிந்தவர்களை தேர்வு செய்து செய்ய வேண்டும் என்றும் இந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.
திருப்புன்கூர் சிவன்
திருப்புன்கூர் சிவன் கோவிலுக்கு மட்டும் சிறப்பு என்று பலரும் நினைக்கலாம். தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராஜேந்திரசோழன் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர்ச் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்று அருளினார் அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி,சந்நிதியில் பாடி மழை பெய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழை பெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்குக் கட்டளையிட்டுவிட்டுப் பாடினார், மழைபெய்து எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை மிகுதியைக் கண்ட மன்னன் அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்டினார். அவரும் மேலும் பன்னிருவேலி கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றதாம்.
நந்தனாருக்காக விலகிய நந்தி
சிவனுக்கு நேராக இல்லாமல் நந்தி இத்தலத்தில் சற்றே விலகியிருக்கிறார். திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத்தரசிக்க முயன்ற நாயனார், தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்த்தார், நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார். இறைவன் இவருடைய உள்ளப் பக்தியை கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார். அதனை ஏற்று நந்தி விலகியிருக்கிறார். இந்த நந்திக்குத்தான் மகா அபிஷேகம் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.
வருணன் கருணையால் மழை
மழை பெய்ய வருணபகவான் மனது வைக்க வேண்டும். ஃபனி புயல் திசைமாறியதால் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. யாகம், ஹோமம் சிறப்பு அபிஷேகங்கள் செய்தாலும் வருணபகவான் கண் திறந்து பார்த்து கருணை மழை பொழிந்தால் மட்டுமே தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தீரும்.