திருமணங்களுக்கு இனி எப்படி போவது? நாடு முழுக்க மேக்சி கேப் உற்பத்திக்கு தடை? இனி பயணிப்பது கஷ்டம்!
சென்னை: நாடு முழுக்க மேக்சி கேப்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனால் புதிய மேக்சி கேப்கள் இனி உருவாக்கப்படாமல் போகலாம்.
'மேக்சி கேப்' வகையை ரத்து செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேக்சிகேப்கள், புறநகர்ப் பகுதிகளிலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்குச் செல்வதற்கு முக்கியமான வாகனங்களாக உள்ளன.

பல துறைகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து சேவைகளை இந்த வாகனங்களே வழங்குகின்றன. பள்ளிகளுக்கு பலரும் இந்த வாகனத்திலேயே செல்கின்றனர். அதேபோல் திருமண நிகழ்விற்கு இந்த வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
இதை நாடு முழுக்க நிறுத்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.இப்போது இயங்கும் வாகனங்களுக்கு தடை இல்லை. ஆனால் இனி உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மாநில போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் இதை கடுமையாக எதிர்த்து உள்ளார்.
இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து உள்ளார். தொலைதூர பகுதிகளை நகர்ப்புற மையங்களுடன் இணைப்பதில் இந்த வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை நிறுத்துவது சரியாக இருக்காது என்று எச்சரித்து உள்ளார்.
அமைச்சர் முக்கிய முடிவு:
இது போக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, புதிய வாகனங்கள் வாங்குவதற்கான தள்ளுபடியை அறிவித்து உள்ளார். எனது பரிந்துரையின் பேரில், பல வணிக மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் இந்த புதிய வசதியை கொண்டு வந்துள்ளனர். அதன்படி முறையான சான்றிதழுடன் பழைய வாகனங்களை மாற்றி, அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கினால் அதற்கு தள்ளுபடி கொடுக்க முடியும்.
அதிக அளவில் தள்ளுபடி இதற்கு வழங்கப்படும். தூய்மையான, பாதுகாப்பான மற்றும் திறமையான வாகனங்கள் சாலைகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும், அதேபோல் காற்று மாசுபாடு குறையும். இதை மனதில் வைத்தே தள்ளுபடியை அறிமுகப்படுத்தி உள்ளோம், என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எவ்வளவு தள்ளுபடி: இதன் காரணமாக, ஆட்டோ மேஜர்கள் தங்கள் பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய வாகனத்தை வாங்கினால்.. அதற்கு 1.5-3.5 சதவீதம் தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பழைய வாகனங்களை மொத்தமாக அப்புறப்படுத்தவும் விரைவில் புதிய சலுகைகள், விதிகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
லைசன்ஸ்: இது போக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற புதிய சில விதிகளை அறிமுகப்படுத்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதியை பின்பற்றி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதில், மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.
மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications