Actor Abbas: சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்த நிலைமை! இது அசிங்கம் இல்ல.. யாரும் உதவ மாட்டாங்க! அப்பாஸ் உருக்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் அப்பாஸ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது வாழ்க்கை மற்றும் தொழிலில் சந்தித்த நிஜமான சவால்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
இயல்பான முகபாவனை, மென்மையான நடிப்பு, இளைஞர்களுக்கு நெருக்கமான கேரக்டர்கள் ஆகியவற்றால் அறிமுகமான அப்பாஸ், ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். காதல் கதைகளிலும், குடும்பப் படங்களிலும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.

அப்பாஸ் பேட்டி
அந்த பேட்டியில் அப்பாஸ், சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காலத்தில் அவர் செய்த வேலைகளை பற்றி நேர்மையாக பேசினார். "பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவணுமா? ஆம்பளைங்க கழுவக் கூடாதா? சில பேர் என்ன சார் கக்கூஸ் கிளீன் பண்ணிட்டீங்களான்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா சுத்தம் முக்கியம். கிண்டல் பண்ணுறவன் யாரும் சோறு போடமாட்டான். சினிமா வாய்ப்பு இல்லாத நேரத்தில் அந்த விளம்பரத்துக்காக 8 வருஷம் ஒப்பந்தம் போட்டாங்க. நல்ல சம்பளம் கொடுத்தாங்க. அந்த காசு தான் அந்த நேரத்துல எனக்கு வாழ்க்கை நடத்த உதவிச்சு" என்று கூறினார்.
இந்த வார்த்தைகள், "வேலை எதுவாக இருந்தாலும் அவமானப்படாமல் செய்ய வேண்டும்" என்ற மனநிலையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் கிடைத்த உயரம் - பின்னர் வந்த இடைவெளி
1990களின் இறுதி மற்றும் 2000களின் தொடக்க காலகட்டத்தில் அப்பாஸ் நடித்த படங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. காதல் கதாபாத்திரங்களில் அவரின் மென்மையான நடிப்பு தனி அடையாளமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ், பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காலத்தையும் சந்தித்தார்.
அந்த இடைவெளி காலத்தில் பலர் அவரை மறந்து விட்டதாக நினைத்தாலும், அவர் தனது வாழ்க்கையை நேர்மையாக முன்னெடுத்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை முதன்மையாக எடுத்துக் கொண்டதாகவும், அதற்காக எந்த வேலையையும் செய்யத் தயங்கவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை யதார்த்தம்
அப்பாஸ் பேட்டியில் வெளிப்பட்ட முக்கியமான விஷயம், அவரது யதார்த்தமான வாழ்க்கை அணுகுமுறை. "சினிமா நிரந்தரம் கிடையாது. இன்று இருக்குற வாய்ப்பு நாளைக்கு இருக்காம போகலாம். அப்போ வாழ்க்கையை நடத்த வேறு வழி தேடிக்கணும். அதில் எந்த அவமானமும் இல்லை" என்ற கருத்தை அவர் மறைமுகமாக பதிவு செய்திருந்தார்.
பாராட்டு
அப்பாஸ் பேட்டி வெளியான பிறகு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் அவரது நேர்மையை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்."ஸ்டாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் மனசு முக்கியம்", "அவமானத்தைப் பொருட்படுத்தாமல் குடும்பத்தை காப்பாற்றுவது தான் உண்மையான ஆண்மை" என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மீண்டும் சினிமாவை நோக்கி அப்பாஸ்
கடந்த சில ஆண்டுகளாக அப்பாஸ் மீண்டும் சில படங்களில் சிறு வேடங்களிலும், குணச்சித்திர பாத்திரங்களிலும் தோன்ற தொடங்கியுள்ளார். முன்னணி ஹீரோவாக இருந்த காலத்தை விட இப்போது வேறு விதமான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்.
சினிமாவில் மீண்டும் நிலையான இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையும், அதே நேரத்தில் வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக்கொண்டு முன்னே செல்லும் மனநிலையும் தான் இன்று அப்பாஸின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அப்பாஸ் பேட்டி, சினிமாவின் மின்னும் உலகின் பின்னால் இருக்கும் கடினமான வாழ்க்கை உண்மைகளை நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. புகழ், பணம், வாய்ப்புகள் எல்லாம் நிரந்தரம் அல்ல. ஆனால், உழைப்பும் நேர்மையும் இருந்தால் எந்த நிலையிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும் என்பதையே அவர் தனது அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications