பீரில் விஷம், நள்ளிரவு சூனியம்.. தன்னை தீர்த்துக்கட்ட அண்ணன் செய்த சூழ்ச்சி! நடிகர் பொன்னம்பலம் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் வில்லன் என்றாலே நினைவுக்கு வரும் முகங்களில் ஒருவர் பொன்னம்பலம். 'நாட்டாமை' படம் தொடங்கி பல பெரிய ஹீரோக்களுக்கு எதிராக பறந்து பறந்து சண்டை போடும் ஸ்டண்ட் காட்சிகளால் ரசிகர்களை மிரள வைத்த நடிகர், சமீப காலமாக உடல்நிலை பாதிப்பால் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் வீழ்ச்சேரில் இருந்தபடி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
"ஒரு காலத்தில் ஆக்ஷன் கிங்... இப்போ இந்த நிலைமையா?" என்று பலரும் வேதனையுடன் பகிர்ந்த அந்த வீடியோக்கு பிறகுதான், தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை பொன்னம்பலம் மனம் திறந்து பேசியுள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
சிறுநீரக செயலிழப்பு காரணமாக பொன்னம்பலம் மரணத்தின் விளிம்பிற்கு சென்ற நேரம் ஒன்றும் ரகசியமில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இயக்குநரும் உறவினருமான ஜெகநாதன் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியதன் மூலம் தான் இன்று பொன்னம்பலம் மீண்டும் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், "கடவுளின் அருளும், நல்ல மனம் கொண்ட மனிதர்களின் உதவியும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று நான் இல்லை" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வைரலான டான்ஸ் வீடியோ
சமீபத்தில் வீழ்ச்சேரில் பொன்னம்பலம் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் அதை பார்த்து, "ஒருகாலத்தில் வில்லன் வேடங்களில் அசத்தினவர்... இன்று இப்படி சாலையில் டான்ஸ் ஆட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டாரா?" என்று பீல் செய்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த பொன்னம்பலம், "நான் பிச்சை எடுக்கவோ, யாரிடமும் கையேந்தவோ இல்லை. நண்பர்களுடன் இருந்தபோது மனசுக்கு சந்தோஷம் வரச் சில நிமிடங்கள் ஆடினேன். அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு என் வாழ்க்கையை கிண்டல் செய்தார்கள். வாழ்க்கை என்னை கீழே தள்ளினாலும், நான் இன்னும் மனதளவில் நிமிர்ந்து நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சிக்கு காரணம்
சமீபத்திய பேட்டியில் பொன்னம்பலம் தெரிவித்த சில தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குடிப்பழக்கம் அல்லது போதைப்பொருள் காரணமாக தான் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது என்று பலர் நினைத்த நிலையில், அவர் அதை முற்றிலும் மறுத்துள்ளார்.
"என் குடும்பத்திலேயே இருந்த ஒருவன் - ஒரு சகோதரன் - எனக்கு பீரில் விஷம் கலந்து கொடுத்தான். அது மெதுவாக உடலில் சேர்ந்து 'ஸ்லோ பாய்சன்' மாதிரி என்னை அழித்தது. அப்போது அது எனக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. பிறகு தான் உண்மை வெளியே வந்தது" என்று கூறியுள்ளார்.
மேலும், ஒருமுறை தான் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது, தன்னுடைய ட்ரஸ், தலைமுடி எல்லாம் வைத்து நடுராத்திரியில் தனது வீட்டின் பின்புறம் மாந்திரீக செயல்கள் செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாகவும், அதனால் அதிர்ச்சியில் உறைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். "என் மீது பொறாமையால் என் அண்ணனே இப்படிப்பட்ட காரியங்கள் செய்தார்" என்று அவர் மன வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
உதவிய திரையுலக நண்பர்கள்
பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்த போது கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் வந்து நலம் விசாரித்து உதவி செய்ததாக பொன்னம்பலம் நன்றியுடன் கூறியுள்ளார்.
வில்லன்களின் வில்லன்
ஸ்டண்ட் நடிகராக சினிமாவில் காலடி வைத்த பொன்னம்பலம், 'நாட்டாமை' படத்தின் மூலம் மிரட்டும் வில்லன் வேடத்தில் பிரகாசித்தார். அதன்பின் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு எதிரியாக நடித்துள்ளார்.
அவரது உடல் மொழி, கணீர் குரல், பறக்கும் கிக், ஆக்ரோஷமான முகபாவனைகள் - எல்லாமே வில்லன் என்றாலே பொன்னம்பலம் என்ற அடையாளத்தை உருவாக்கின. "ஒரு காலத்தில் நான் பறந்து பறந்து சண்டை போட்டேன். இப்போ நடக்கவே கஷ்டப்படுற நிலை. ஆனால் நடிப்பு தான் என் உயிர். உடல் நலம் சரியானதும் மீண்டும் கேமரா முன்னாடி நிற்கணும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி
இன்றும் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், உதவி செய்த முகம் தெரியாத பல நல்ல மனங்களுக்கும் பொன்னம்பலம் நன்றியை தெரிவித்துள்ளார். "நான் கீழே விழுந்த போது என்னை தூக்கி நிறுத்தியது ரசிகர்களின் அன்புதான். அந்த அன்புக்காகவே இன்னும் கொஞ்ச நாள் வாழணும், மீண்டும் சினிமாவுக்கு திரும்பணும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications