ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி
சென்னை: மதுரையின் பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'ஜாக்கி' திரைப்படம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ள மலையாள இயக்குநர் பிரகாபால், ஒரு சாதாரண பயணம் தான் இப்படத்திற்கான விதையாக மாறியதாக கூறியுள்ளார்.

இயக்குனர் கண்ட காட்சி
முதலில் மதுரைக்கு சுற்றுலா வந்த அவர், மீனாட்சி அம்மன் கோவில் அருகே நடந்த 'ஆட்டு சண்டை'யை பார்த்ததே அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த சண்டையின் வன்முறையை விட, ஆடுகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பு தான் அவரை அதிகமாக கவர்ந்ததாம்.
கிடா சண்டை
ஜல்லிக்கட்டு பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், 'கிடா சண்டை' போன்ற இந்த பாரம்பரிய விளையாட்டு பலருக்கும் தெரியாதது அவருக்கு புதுமையாக இருந்ததாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கலாச்சாரத்தை திரைப்படமாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அப்போது உருவானதாம்.
மதுரை பாரம்பரிய கதை
இதற்காக அவர் சும்மா கதை எழுதவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றி, இந்த விளையாட்டை நேரில் பார்த்து, அதில் ஈடுபடும் மக்களுடன் பேசி ஆராய்ச்சி செய்துள்ளார்.
இந்த ஆட்டு சண்டை ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அது பல குடும்பங்களின் பெருமை, அடையாளம். இதில் வெற்றி பெற்றால் அந்த குடும்பத்திற்கு கௌரவம், தோற்றால் அவமானம். இதனால் பல நேரங்களில் போட்டியும், பகையும் உருவாகும் அளவுக்கு இது உணர்ச்சிபூர்வமான விஷயமாக இருக்கிறது.

கிடா சண்டை பின்னணி
இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் இது பெரிய சவாலாக இருந்ததாம். ஆடுகளை கையாள்வது எளிதல்ல. அதனால் அவர்கள் நேரடியாக ஆடுகளுடன் பழகி, அவற்றுடன் ஒரு உண்மையான பிணைப்பை உருவாக்கி நடித்துள்ளனர். அதனால் தான் காட்சிகள் இயல்பாக வந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றும் மதுரை பகுதியில் பல இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கை தாண்டி, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது.
'ஆடுகளம்' போன்ற படங்களுடன் ஒப்பிடப்படும் இந்த 'ஜாக்கி', அதைவிட வேறுபட்ட கோணத்தில், கமர்சியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில், ஒரு கிராமிய விளையாட்டை மட்டும் காட்டாமல், அதன் பின்னாலுள்ள மனிதர்களின் உணர்ச்சிகளையும், பெருமையையும் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications