உதயநிதி ஸ்டாலின் பேச்சு கெத்தாக இருந்தது.. எம்ஜிஆர் பாட்டு பாடி பாராட்டிய சத்யராஜ்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக முதல் உரையை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் சினிமா உலகத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக "சனாதனம் ஒழிய வேண்டும்" என்ற அவரது கருத்து, பல்வேறு தரப்பினரிடையே எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரை பாராட்டி நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு
எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து, குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பை ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, தமிழக வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். ஆனால், இறுதியில் கூறிய "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்" என்ற வாசகம், அரசியல் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல்வர் விஜய்யின் ரியாக்ஷன்
அந்த நேரத்தில் முதல்வராக இருந்த விஜய், எந்தவித பதிலும் அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டது, பல்வேறு விளக்கங்களுக்கு வழிவகுத்தது. அவரது இந்த செயல், ஆதரவு எனவா அல்லது மரியாதை எனவா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.
சத்தியராஜ் வாழ்த்து
இந்த சூழலில் நடிகர் சத்தியராஜ் வெளியிட்டுள்ள வீடியோ, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதில், உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிகழ்த்திய முதல் உரையை மிகவும் பாராட்டியுள்ளார். அந்த உரை ஒரு அரசியல்வாதி கடைப்பிடிக்க வேண்டிய கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் முழுமையாக வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சட்டமன்றத்தில் இவ்வளவு தெளிவான மற்றும் நேரடியான பேச்சு கேட்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிலும் முக்கியமாக, "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்" என்ற உதயநிதியின் கருத்தை சத்தியராஜ் தனியாக எடுத்துக் கூறியுள்ளார். அந்த வார்த்தை ஒரு சாதாரண அரசியல் வாசகமல்ல, ஒரு சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் துணிச்சலான கருத்து என அவர் பாராட்டியுள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதை பார்க்கும்போது அவ்வளவு கெத்தாக இருந்தது. அதை பார்க்கும் போது எனக்கு தலைவரின் பாடல் தான் ஞாபகம் வருகிறது. நான் எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. "உதய்... Hats off you!" என்று ஆங்கிலத்தில் பாராட்டியிருக்கிறார்.
அரசியல் எதிர்ப்பு
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட கருத்துகள் கூறப்படக்கூடாது" என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், இந்த விவகாரம் அரசியல் வாதம் மட்டுமின்றி மத மற்றும் சமூக விவாதமாகவும் மாறியுள்ளது.
பழைய சர்ச்சை
2023ஆம் ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தும் இதேபோல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தொடங்கிய விவாதம், தற்போது மீண்டும் புதிய வடிவில் எழுந்துள்ளது.













Click it and Unblock the Notifications