Sirai Review: சிறை படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ! வருட கடைசியில் வந்த மாஸ் படம்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் 25-வது திரைப்படமான 'சிறை', திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான இந்த படம், வழக்கமான கமர்ஷியல் சினிமாவிலிருந்து விலகி, ஒரு தீவிரமான கதையையும் சமூக அக்கறையையும் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறது.

கதைக்களம்
வேலூர் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் 'லாங் ஸ்கார்ட்' பயணம் தான் படத்தின் மையம். அந்த கைதியை அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு வருகிறார். இந்த பயணத்தின் போது நடக்கும் சம்பவங்கள், கைதி தப்பிக்க முயற்சிப்பது, அதனுடன் பின்னிப்பிணையும் கதாபாத்திரங்களின் கடந்தகாலம் ஆகியவை திரைக்கதையாக விரிகிறது.
சாதாரணமாக தோன்றும் இந்த கதை, எதிர்பாராத திருப்பங்களால் பார்வையாளரை தொடர்ந்து இருக்கையின் முனையில் வைத்திருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு காக்கிச் சட்டை அணிந்து, ஒரு கடமைமிக்க போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருப்பது பாராட்டத்தக்கது. உடல் மொழி, முகபாவனை, ஆக்ரோஷம், கட்டுப்பாடு - அனைத்திலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.

'டாணாக்காரன்' படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு வலுவான போலீஸ் வேடத்தில் விக்ரம் பிரபு முத்திரை பதித்துள்ளார். இந்த படத்தின் மற்றொரு பெரிய பலம், எல்.கே. அக்ஷய் குமார் மற்றும் அனுஷமா அனில் குமார் ஆகியோரின் நடிப்பு. அக்ஷய் குமார் நடித்துள்ள 'அப்துல்' என்ற கைதி கதாபாத்திரம், அப்பாவித்தனம், வேதனை, காதல், பயம் என பல உணர்வுகளை ஒரே முகத்தில் வெளிப்படுத்துகிறது. அக்ஷய் குமாருக்கு இது முதல் படம் என சொல்ல முடியாத அளவிற்கு, அவர் தனது கதாபாத்திரத்தில் முழுமையாக பொருந்தியுள்ளார்.
கதாநாயகி அனுஷமாவிற்க்கு இது முதல் தமிழ் படம் என்றாலும், காதல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இருவருக்குமிடையிலான காதல் காட்சிகள் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைந்துள்ளன.

துணை நடிகர்கள்
மூணாறு ரமேஷ் உட்பட அனைத்து துணை நடிகர்களும் தங்களுக்கான பங்கை சரியாக செய்துள்ளனர். குறிப்பாக ஒரு முக்கிய காட்சியில் வரும் அவரது வசனம் தியேட்டரில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, வலுவான திரைக்கதையாக மாற்றியுள்ளார். காவல்துறைக்குள் நடக்கும் அதிகார அரசியல், மேலதிகர்-கீழதிகர் முரண்பாடுகள், நீதிமன்ற நடைமுறைகளின் சிக்கல்கள் போன்றவை அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப பலம்
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மணிக்கம் ஒவ்வொரு காட்சியையும் பதற்றம் குறையாமல் காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்தில் வரும் பஸ் சீன் மற்றும் சண்டைக் காட்சிகள் பாராட்டுக்குரியது. ஜஸ்டின் பிரபாகரன் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது.
இறுதியாக
'சிறை' என்பது வழக்கமான போலீஸ் படமல்ல. சமூக பிரச்சினைகள், காதல், திரில்லர் அம்சங்கள் அனைத்தையும் இணைத்து, விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லப்பட்ட ஒரு நேர்மையான முயற்சி. திரையரங்கில் தவறாமல் பார்க்க வேண்டிய, எங்கேஜிங் ஆன ஒரு நல்ல திரைப்படம் என்றே 'சிறை'யை சொல்லலாம்.












Click it and Unblock the Notifications