இந்த பாவம் உங்க குடும்பத்தையே கருவருக்கும்.. இப்படியே போனால் தமிழ் சினிமா சாகும்! இயக்குநர் சுரேஷ் காமாட்சி வேதனை
சென்னை: தமிழ் சினிமாவில் சிறிய படங்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சியின் ஆதங்கம் தற்போது திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவின் மாநாடு, வணங்கான், நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ, கங்காரூ போன்ற படங்களை தயாரித்ததுடன், மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கி தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவரது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவான சல்லியர்கள் திரைப்படம், ஜனவரி 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்கள் கிடைக்காததால் படம் திரைக்கு வர முடியாமல் போனது.

இதுகுறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சுரேஷ் காமாட்சி, "வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே கிடைத்த நிலையில், படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை" என்று கூறியுள்ளார். அதுவும் எந்த பெரிய படமும் வெளியாகாத காலகட்டத்தில் கூட திரையரங்குகள் தர மறுக்கப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். "இது மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு கொடுமை. இங்கே மட்டும் சிறிய படங்களுக்கு இப்படியொரு நவீன தீண்டாமை நடைமுறையில் உள்ளது" என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சல்லியர்கள் திரைப்படம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றும், "எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டம் வேண்டுமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, பிவிஆர் போன்ற கார்ப்பரேட் திரையரங்குகள் ஒரு திரையரங்குகூட தரவில்லை என்றும், தொடர்புகொண்டால் "போனையே எடுக்கவில்லை" என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அவர் வெளிப்படுத்திய ஆதங்கம் மிகவும் கடுமையானதாக இருந்தது. "பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராதது நவீன தீண்டாமை. இந்த பாவம் உங்க குடும்பத்தை சும்மா விடாது" என உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார். மேலும், "ஒரு படம் ஓடுமா இல்லையா என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க இவர்கள் யார்? படம் ஓடலைன்னா தூக்குங்க, பரவாயில்லை. ஆனால் வாய்ப்பே கொடுக்காமல் தீர்ப்பளிப்பது நியாயமா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சிறு முதலீட்டுப் படங்களுக்கு கூட திரையரங்குகள் கிடைக்கின்றன என்றும், ராஜூ வெட்ஸ் ரம்பை போன்ற படங்கள் பெரிய வசூலை ஈட்டியதற்குக் காரணமே திரையரங்குகள் கிடைத்ததுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "இங்கே இப்படியே சிறு படங்களை நசுக்கிக் கொண்டே போனால், தமிழ் சினிமா மெல்ல மெல்ல அழிந்து போய்விடும்" என்று எச்சரித்துள்ளார்.
இறுதியாக, சல்லியர்கள் படம் OTT PLUS தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ள சுரேஷ் காமாட்சி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். "இன்று எனக்கு நடந்தது நாளை இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். விழித்துக் கொள்ளுங்கள்" என்ற அவரது வார்த்தைகள், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் கடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இது குறித்து அவர் பேசும்போது, இது போன்று சின்ன படங்களுக்கு செய்யும் பாவம் உங்க குடும்பத்தையே கருவருக்கும். இப்படியே போனால் தமிழ் சினிமா சாகும் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications