Va Vaathiyaar 3rd day box office: வா வாத்தியார் 3வது நாள் வசூல்.. அதுவும் இத்தனை கோடியாமே!
சென்னை: கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் பல ஆண்டுகளாக நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளை எட்டியுள்ளது. நலன் குமாரசாமி என்றாலே தனித்துவமான திரைக்கதை, நகைச்சுவை கலந்த சமூக கருத்து என ரசிகர்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கும்.
அதனால் தான் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்தது. ஆனால் படம் வெளியான பின்னர், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்தே அதிகமாக பரவி வருகிறது.

கார்த்தி கூட்டணி
'சூதுகவ்வும்', 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நலன் குமாரசாமி. அந்த வரிசையில், முதல் முறையாக கார்த்தியுடன் அவர் கைகோர்த்தபோது, இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே கவனத்தை ஈர்த்தது.
ரிலீஸுக்கு முன்பே சிக்கல்களில் சிக்கிய படம்
படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் பல வருடங்களுக்கு முன்பே முடிவடைந்தன. ஆனால் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக படம் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போனது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்படுவது என ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ஒருவழியாக போகி பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகியது.
வித்தியாசமான கதைக்களம்
'வா வாத்தியார்' வழக்கமான மாஸ் அல்லது கமர்ஷியல் பாதையில் செல்லாமல், ஃபேண்டஸி மற்றும் சூப்பர் ஹீரோ அம்சங்களை இணைத்துக் கொண்ட கதை அமைப்பில் உருவாகியுள்ளது. எம்ஜிஆரின் ஆன்மா ஒரு சாதாரண மனிதருக்குள் புகுந்து சமூக நலன் சார்ந்த விஷயங்களில் தலையிடுகிறது என்பதே கதையின் மையம்.
இந்த ஒன்-லைன் புதுமையாக இருந்தாலும், அதை திரையில் சொன்ன விதம் அனைவரையும் ஒரே மாதிரி கவரவில்லை. குறிப்பாக திரைக்கதை, காட்சிகளின் நீளம் மற்றும் இரண்டாம் பாதியின் வேகம் குறைவாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்தியின் நடிப்பு தான் முக்கிய பலம்
படம் முழுவதிலும் கவனம் ஈர்க்கும் அம்சமாக கார்த்தியின் நடிப்பே பேசப்படுகிறது. எம்ஜிஆரின் உடல்மொழி, வசனம் பேசும் பாணி போன்றவற்றை அவர் முயற்சி செய்திருப்பது ஆரம்பத்தில் ரசிக்க வைக்கிறது. ஆனால் சில இடங்களில் அது அதிகமாகத் தோன்றியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருந்தாலும், படம் முற்றிலும் சோர்ந்து போகாமல் ஓரளவு நிலைத்திருக்க காரணம் கார்த்தியின் ஸ்கிரீன் பிரசென்ஸ்தான் என சொல்லப்படுகிறது.
வசூலில் நிலையான முன்னேற்றம்
விமர்சனங்கள் சராசரியாக இருந்தாலும், படத்தின் வசூல் முழுமையாக சரிந்துவிடவில்லை. வெளியான முதல் மூன்று நாட்களில், இந்தியா முழுவதும் படம் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய ஹிட் படங்களின் போட்டி இருந்த சூழலிலும், இந்த அளவிலான வசூல் திரைத்துறையினர் பார்வையில் மோசமானதாக இல்லை என்றே கருதப்படுகிறது.
'வா வாத்தியார்' எதிர்பார்த்த அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், முற்றிலும் தோல்வி என்ற முத்திரையையும் பெற்றுவிடவில்லை. வித்தியாசமான கதை முயற்சி, கார்த்தியின் நடிப்பு ஆகியவை படத்திற்கு ஓரளவு ஆதரவாக உள்ளன.












Click it and Unblock the Notifications