Jana nayagan: விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஜனநாயகன் ரிலீசுக்கு கிடைத்த வாய்ப்பு
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற அடையாளத்துடன், அரசியல் பின்னணி கொண்ட கதைக்களத்துடன், உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் ரேஸின் மையமாக இருக்கும் என பெரும்பாலானோர் நம்பினர். ஆனால் தற்போது அந்த நம்பிக்கைகள் அனைத்தையும் உடைக்கும் விதமாக, 'ஜனநாயகன்' படம் இந்தாண்டு பொங்கல் பந்தயத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி இப்போது கிடைத்திருக்கிறது.
படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததே இந்த சிக்கலின் தொடக்கமாக அமைந்தது. சென்சார் போர்டு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக கடும் எதிர்ப்புகளை முன்வைத்த நிலையில், தயாரிப்பு தரப்பு மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தை நாடியது.
ஆனால், இந்த வாரம் முழுவதும் 'ஜனநாயகன்' தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வாய்ப்பு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி வரும் ஜனவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒருவேளை விசாரணையில் ஜனநாயகனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் படம் பொங்கலுக்கு 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் போது அதுவும் விடுமுறை காலம் என்பதால் வசூல் கிடைத்துவிடும். ஆனால் பாராசக்தி ஓடும் தியேட்டர்கள் குறைந்துவிடும், அதனால் அந்த படத்திற்கு பிரச்சனை தான். அதேபோல விஜய்யின் தெறி படத்தின் ரீ ரீலீஸ் கூட தள்ளிப் போனதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
'ஜனநாயகன்' திரைப்படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. அரசியலுடன் கூடிய கதைக்களம், மக்கள் நலன், ஜனநாயகம், அதிகாரம் போன்ற கருத்துகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரு நட்சத்திர பட்டாளமே 'ஜனநாயகன்' படத்தில் இடம் பெற்றுள்ளது. இசை, தொழில்நுட்பம், காட்சியமைப்பு என அனைத்திலும் படம் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த அனைத்து முயற்சிகளையும் தற்போது தணிக்கை சிக்கல் பின்னுக்கு தள்ளி விட்டது.
பொங்கல் பந்தயத்தில் இருந்து வெளியேறினாலும், 'ஜனநாயகன்' முற்றிலும் முடங்கிவிட்டது என்று சொல்ல முடியாது. உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், படம் வேறு ஒரு தேதியில் வெளியாகும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், விஜய்யின் கடைசி படம், பொங்கல் போன்ற பெரிய பண்டிகையில் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் போனது, இந்த ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுமையாக மாற்றியுள்ளது என்பதே பலரின் வருத்தமான கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications