உலகத் தொலைக்காட்சி தினம்
இருப்பினும் தமது முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. இலண்டனுக்குத் தெற்கே சுமார் அறுபது மைல் தொலைவில் ஜோன் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். பணப் பிரச்சினை காரணமாக ஜோனின் ஆய்வுக் கூடத்தில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களே நிறைந்திருந்தன. பொருளாதார பலத்துடன் வேறு பல விஞ்ஞானிகளும் அதே ஆய்வுகளில் ஈடுபட்டிருந்ததனால், அவர்களுக்கு முன்னர் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டிய அவசியமும் ஆர்வமும் ஜோனுக்கு இருந்தது.
நிப்கோவின் கண்டுபிடிப்பைச் சார்ந்து 'டெலிவிசர்' என்னும் தொலைக்காட்சிப் பெட்டியை 1923ல் ஜோன் உருவாக்கினார். 1924ல் ஜோன் இலண்டனில் குடியேறினார். அந்த வருடத்திலே ஒரு கடையில் ஜானின் 'டெலிவிசர்' பொது மக்களுக்கு இயக்கிக் காட்டப்பட்டது. ஒரு பொம்மையின் உருவத்தை மக்கள் திரையில் கண்டு களித்தார்கள். 1925ம் ஆண்டு அக்டோபரில் ஜோன் தனது கண்டு பிடிப்பை மேலும் மேம்படுத்தினார். விளக்கு ஒளியில் பயந்தவாறே காமிராவின் முன் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவன்தான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனிதன்.
1926ம் ஆண்டில் இங்கிலாந்து 'ராயல் இன்ஸ்டியூசன்' முன்பு ஜோன் தனது தொலைக்காட்சிக் கருவியை இயக்கிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து ஜோனின் ஆய்விற்குப் பிரித்தானிய தபால் நிறுவனத்தாரின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிட்டியது. இலண்டனிலும் அதனருகே புறநகர் பகுதி ஒன்றிலும் ஆய்வுக்காக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைக் கட்டடங்கள் நிறுவப்பட்டன.
இதனைப் பயன்படுத்தி ஜோன் பல சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கினார். இலண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு (438 மைல் தொலைவு) தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது. 1928-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து கடல் கடந்து நியூயார்க் நகருக்குத் தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது.
சாதனைகள் ஜோனை மக்களிடத்தில் பிரபலப்படுத்தின. வெறும் வானொலி நிலையமாய் இருந்த பி.பி.சியிடம் (பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி கேட்டபொழுது, அவரது கோரிக்கையை பி.பி.சி. நிராகரித்தது.
பி.பி.சியின் துணையில்லாமல் தன்னால் தனியே ஒளிபரப்பைத் தொடங்க முடியுமென்று கருதிய ஜோன் 1929ல் பெர்லினிலிருந்து தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தார். பத்திரிகைகளின் பலத்த கண்டனத்தினால் பி.பி.சி தனது நிலையை மாற்றிக் கொண்டு 1929 செப்டம்பரில் ஜோனுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது.
1933ம் ஆண்டில் விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின், கேத்தோடு டியூபைக் கண்டுபிடித்திருந்தார். அவருடைய முயற்சியினால் உருவாகிய 'All Electronic Scanning System' ஜோனின் தொலைக்காட்சியைக் காட்டிலும் தெளிவான படங்களை ஒளிபரப்பும் திறமையைக் கொண்டிருந்தது.
இதனைக் காரணம் காட்டி பி.பி.சி, ஜோனுடன் தனது உடன்படிக்கையை முறித்துக் கொண்டு புதிதாய் நிறுவப்பட்ட 'EMI' நிறுவனத்தாருடன் பி.பி.சி. தன்னை இணைத்துக் கொண்டது. ஸ்வாரிகினின் நிறுவனமான 'RCA'யும், ''EMI'யும் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவையைத் தொடங்கின. உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவது இந்த மூன்று நிறுவனங்களின் நோக்கமாய் இருந்தது. இதனால் சிறு கண்டுபிடிப்பாளரான ஜோன் லூகி பெர்ட் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
இந்நிலையில் ஜோனிற்கு 'கேமாண்ட் பிரிட்டிஷ்' என்ற நிறுவனம் உதவி செய்ய முன் வந்தது. இயந்திரத் தொலைக்காட்சியின் மூலமாகவே புதிதாய் அறிமுகமான ஸ்வாரிகின்னின் இயந்திரத்தை மிஞ்ச முடியுமென ஜோன் முழுமையாக நம்பிக்கை கொண்டார். 'கேமாண்ட் பிரிட்டிஷ்' நிறுவனம் பில்லோ ·பாரன்ஸ்வர்த் என்கிற அமெரிக்க இளைஞனை ஜோனுக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த அமெரிக்க இளைஞன் 'பாரன்ஸ்வர்த்", கேத்தோட் டியூபை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த ஒளிபரப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார். ஜோனும் பாரன்ஸ்வர்த்தும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டு ஜோனின் முந்தைய கண்டுபிடிப்புகளையெல்லாம் மிஞ்சும் சாதனையைச் செய்தாலும், ''EMI' நிறுவனத்தாரின் ஆய்வு, முன்னேற்றத்தில் அவர்களுக்கு ஒரு படி முன்னே இருந்தது.
1937-38 வருட வாக்கில் ஜோன் மெல்ல மெல்லத் தனது ஆய்வுகளிலிருந்து ஒதுங்கித் தனிமையில் காலங் கடத்தலானார். தொடர்ந்து அவரது முக்கிய ஆய்வகம் நெருப்பில் அழிந்து போனது. எனினும் ஜோனின் மற்றொரு கண்டுபிடிப்பான தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் பிரபலமடைந்தது. 1940ம் வருடம் ஜோனின் நிறுவனம் 'சினிமா தொலைக்காட்சி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஜோனின் புது முயற்சி, இரண்டாம் உலகப் போரினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினாலும் பல பிரச்சினைகளைச் சந்தித்தது.












Click it and Unblock the Notifications