''தாத்தா பிறகேன் ராவணன் அழிக்கப்பட்டான்?''
-ரிஷிசேது
கஷ்டம் என்றால் என்ன என்கிறாள் மகள்
அது சொல்லித் தெரிவதில்லை என்கிறேன் நான்
பிறகேன் அதை சொல்ல வேண்டுமென்கிறாள் தொடர்ந்து
மெல்ல மெல்ல முட்டி ஓட்டை உடைத்து
வெளி வருகிறது ஒரு சிறு பறவை
தூரத்தில் திருப்பப்படுகிறது கேமரா
புள்ளியென தெரிந்து பின் பெரிதாகிறது வல்லூறு
சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்த
குஞ்சை கொத்திப் போகிறது..
மகள் இது பறவைக்கு கஷ்டமெனில்
இன்னொன்றின் உணவல்லவா என்கிறாள்
கஷ்டம் போகனும்னா கடவுளைக் கும்பிடு
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
என் அப்பா சொல்ல
''தாத்தா பிறகேன் ராவணன் அழிக்கப்பட்டான்?''
பேசாதிருந்தேன் நான்- வேறு ஸ்லோகம் வேறு கடவுள்
என விரியும் அந்த தர்கத்தில்
மகள் வென்றுவிடாதிருக்க என் மனைவியும் சேர
இறுதியில் புத்தர் நுழைகிறார்
'இட் மேக்ஸ் ஸென்ஸ்'- ஆசையே எல்லாம்
ஒரு வழியாய் முடிந்ததென நினைக்க
''ஆமாம் கஷ்டம்னா ஒன்னுமில்லையா?''
''டோன்ட் ஆர்கியூ ஷ்ரேயா'' கிட்டத்தட்ட
கத்தினாள் என் மனைவி....
மெளனமே சிறந்தது என்கிறாள்
பிறகேன் மொழி....விரிகிறது
பதிலும் கேள்விகளும்....
-ரிஷி சேது ( [email protected] )












Click it and Unblock the Notifications