செங்கரும்பு, மதுரை மல்லி: சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் களைகட்டிய பொங்கல்
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாக்கோலமிட்டு திறந்தவெளியில் பொங்கல், உரியடித்தல், பறை இசை, கயிறு இழுத்தல், சிலம்பாட்டம் என பொங்கல் கொண்டாட்டங்கள் தமிழக கிராமங்களிலேயே அரிதாகிவிட்டது. இருப்பினும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற தமிழ் விழாவில் கலிபோர்னியா தமிழர்கள் பாரம்பரிய மணத்தோடு பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.
அதன் விவரம் வருமாறு,
பொங்கல்
அழகிய கிராமத்து குடில் அமைத்து, இனிக்கும் செங்கரும்பு, மணக்கும் மதுரை மல்லிகையோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து குடும்பம் குடும்பமாக திறந்த வெளியில் பொங்கல் வைத்து குலவியிட்டு மகிழ்ந்தனர்.
பறை இசை
பறை இசை குழுவினர் கிராமிய பொங்கல் பாடல்களுடன் பொங்கலிடும் அரங்கை வலம் வந்தனர். துணிக்கடை, நகைக்கடை, புத்தகக் கடை என ஒரு சிறிய கிராமத்து சந்தையே அங்கு உருவாக்கியிருந்தனர்.
பாராட்டு
35 வருடங்களுக்கு முன் தமிழ் மன்றத்தை தொடங்கி வைத்த திரு. தமிழன் அவர்கள் விழாவை குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். 1965ம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் இறந்தோருக்கு 50ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தபட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இந்திய தூதரக அதிகாரிகள் திரு. அசோக் வெங்கடேசன், திரு. பாஸ்கரன் மற்றும் டெஸ்லா மோட்டார் தலைமை தகவல் அதிகாரி திரு. ஜெய் விஜயன் ஆகியோருக்கு மரியாதை செய்யபட்டது.
கரகம், காவடி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரகம், காவடி, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள், கிராமிய நிகழ்ச்சிகள், திரை இசை நடனம் என அரங்கமே அதிரும் வகையில் பங்கெடுத்து பொங்கல் விழாவை சிறபித்தனர். ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் தமிழ்விழா பற்றிய அறிவிப்பும் அரங்கில் வெளியிடப்பட்டது.
பட்டிமன்றம்
வளைகுடா பகுதியில் தமிழ் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் இனம் கண்டு வாய்ப்பளித்து ஊக்குவிக்கவும், புலம் பெயர்ந்த புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும், தமிழ் மன்ற வரலாற்றிலேயெ முதல் முறையாக விழுதுகள் என்னும் காலாண்டு இதழ் வெளியிடப்பட்டது. இது வளைகுடா பகுதி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழையும் தமிழர் அடையாளத்தையும் காக்கும் பொறுப்பில் ஆலம் விருஷமாய் வளரும் விழுதுகளாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுவதும் 6000க்கும் மேலான மேடைகளில் பங்கேற்று முத்திரை பதித்த திருமதி. உமையாள் முத்து அவர்கள் தலைமையில் "தமிழ் தழைத்திட தளராமல் உழைப்பது தாயக தமிழரே! இல்லை புலம் பெயர் தமிழரே!" என்ற தலைப்பில் வளைகுடா பகுதி தமிழ் பேச்சாளர்களை கொண்டு மிகவும் சிறப்பான பட்டிமன்றம் நடைபெற்றது.
தாய் நாட்டை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல உதவும் இது போன்ற விழாக்களை எடுத்து நடத்தும் தமிழ்மன்ற குழுவினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பாராட்டுகுறியவர்கள்.