க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் தட்ஸ்தமிழில் எழுதும் 'நான் முகம் பார்த்த கண்ணாடிகள்'!
ராஜேஷ்குமார்...
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் க்ரைம் கதை மன்னனாகத் திகழ்பவர்.
கோவையில் பிறந்து, பிரபல எழுத்தாளரான பிறகும் சென்னை வாசத்தைத் தவிர்த்து, கோவைலேயே வசித்து வரும் ராஜேஷ்குமார் எழுதிய முதல் நாவல் வாடகைக்கு ஒரு உயிர் 1980-ல் மாலைமதியில் வெளியானது.
அவர் எழுதிய முதல் தொடர் ஏழாவது தீர்ப்பு கல்கண்டுவில் வெளியானது.

இதுவரை 1500 நாவல்கள் எழுதி உலக சாதனைப் படைத்திருக்கிறார் ராஜேஷ்குமார். 2000 சிறுகதைகள், 250 தொலைக்காட்சித் தொடர்கள் என அவர் சாதனைகள் தொடர்கின்றன.
இன்றைய சினிமா இயக்குநர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ராஜேஷ்குமாரின் விறுவிறு க்ரைம் கதைகளே. ஆனால் அவருக்கோ திரைப்படத் துறையில் ஆரம்பத்தில் நேர்ந்தவை கசப்பான அனுபவங்கள். அவற்றை ஒரு தனி தொடராகவே எழுதியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த சண்டமாருதம் இவரது கதை, திரைக்கதை, வசனத்தில் உருவானதுதான். இப்போது நான்கு படங்கள் இவரது எழுத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக ஒரு காலகட்டத்துக்குப் பிறகு எழுத்தாளர்கள் அப்படியே தேங்கி விடுவார்கள். ஆனால் ராஜேஷ்குமார் எழுத்து நான்காவது தலைமுறையிலும் அதே வேகத்துடன் தொடரக் காரணம், அவருக்கு தொடர்ந்து உருவாகி வரும் புதிய வாசகர்கள். கல்லூரி மாணவர்கள், சமூக வலைத் தளங்கள் என இன்றைய தலைமுறையிலும் இவர் எழுத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜேஷ்குமாரின் எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி விருதினை வழங்கி கவுரவித்தது தமிழக அரசு. லயன்ஸ் க்ளப் சார்பில் வாழ்நாள் சாதனை விருது, இலக்கியச் சிந்தனை விருது என பல விருதுகளைப் பெற்றாலும், அவற்றையெல்லாம் விட பெருமையாக ராஜேஷ்குமார் கருதுவது மக்கள் சூட்டிய 'க்ரைம் கதை மன்னன்' விருதினைத்தான்.
உலகிலேயே அதிக நாவல் எழுதியவர் என்ற சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிய முயன்றபோது, ரூ 50 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டார்கள். 'பணம் கொடுத்து நம் சாதனையை பதிவு செய்ய வேண்டுமா... அவர்களே தாமாக எப்போது அங்கீகரிக்கிறார்களோ அதுவரை அமைதியாக காத்திருப்போம்' என்று கூறிவிட்டவர் ராஜேஷ்குமார்.
இத்தனை பெருமைகளுக்குரிய ராஜேஷ்குமாரின் புதிய தொடர் 'நான் முகம் பார்த்த கண்ணாடிகள்' இன்றுமுதல் ஒன்இந்தியாவில் வெளியாகிறது.
இணையத்தில் அவர் எழுதும் முதல் தொடரும் இதுதான். இந்தத் தொடர் இதுவரை நீங்கள் படித்திராத வித்தியாசமான தொடராக இருக்கும். தொடர்ந்து படியுங்கள்!












Click it and Unblock the Notifications