Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்வி கடன்கள் தள்ளுபடி- மு.க.ஸ்டாலின் அதிரடி தேர்தல் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஈரோடு வெள்ளோடு பகுதியில் மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

நான் இன்று வெள்ளோடு பகுதியில் இருக்கக்கூடிய உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன். உங்களிடத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை இப்பொழுது தொடங்கப் போகிறேன்.

ஆர்வத்துடன் வந்திருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது நான் உள்ளபடியே பூரிப்படைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். நம் வீட்டில் ஒரு மங்கலமான நிகழ்ச்சி நடப்பதுபோல, பட்டுப் புடவை எல்லாம் கட்டிக் கொண்டு, அலங்கரித்துக்கொண்டு மிக மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள்.

DMK President MK promises education loan waiver

இது நம்ம வீட்டு நிகழ்ச்சி. நம்ம வீட்டுக்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் இன்முகத்தோடு வருக... வருக... வருக... என வரவேற்கிறேன். இது கிராமசபை கூட்டம். இந்த கிராமசபை கூட்டத்தை நடத்தக் கூடாது என்று ஆட்சியில் இருக்கக்கூடிய, அதிகாரத்தில் இருக்கக்கூடிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவு போட்டார்.

மக்களின் குறைகளைக் கேட்பதற்கான கூட்டம் தான் கிராமசபைக் கூட்டம். அதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த கிராமசபை கூட்டம் என்பது வருடத்திற்கு 4 முறை நடைபெற வேண்டும். காந்தி ஜெயந்தி, குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, மே 1 - தொழிலாளர் தினம் ஆகிய நான்கு நாட்கள் இதை நடத்த வேண்டும் என்பது மரபு.

ஆனால், இந்த அதிமுக ஆட்சி அதை முறையோடு நடத்தவில்லை. அதனால்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாம் நடத்தினோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினோம்.

நான் மட்டுமல்ல, நம் கழக பொறுப்பில் இருக்கக்கூடிய முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் அனைவரும் அந்தந்த ஊராட்சிப் பகுதிக்கு சென்று, ஊராட்சிக் கூட்டத்தை நடத்தி முடித்தார்கள்.

அவ்வாறு நடத்தியபோது, ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் எழுச்சியோடு திரண்டார்கள். மக்கள் அவர்களது கோரிக்கைகளைச் சொன்னார்கள். குறைகளைச் சுட்டிக் காட்டினார்கள். குடிநீர், சாலைவசதி, பள்ளிகள் இல்லாத குறை, மருத்துவமனையில் மருத்துவர்கள், உபகரணங்கள் இல்லாதிருப்பது, 100 நாள் வேலைத்திட்டம், மகளிர்சுய உதவிக்குழு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதையெல்லாம் நாம் குறித்து வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அதில் சிலவற்றை நாம் உறுதியாகத் தந்தோம்.

அதில் சில மனுக்களை வாங்கிக்கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடத்திலும், உரிய அதிகாரிகள் இடத்திலும் எடுத்துக் கூறி ஓரளவிற்கு அதை தீர்த்து வைக்கக்கூடிய பணியில் நாம் ஈடுபட்டோம்.

அதன்பின் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து, தமிழ் நாட்டில் இருந்த 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தார்கள். இப்பொழுது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக நம் திராவிட முன்னேற்றக் கழகம் அமர்ந்துள்ளது.

அதற்கு காரணம் நீங்கள்தான். நீங்கள்தான் அந்த வெற்றியை தேடித் தந்தீர்கள். அதேபோல அடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. அராஜகத்தில் ஈடுபட்டது. வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்தார்கள். தோல்வியுற்றவர்களை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். இப்படி எல்லாம் அக்கிரமம் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியும்.

அதனால் திமுக வெற்றி பெற இயலாது என, நம்பிக்கை இல்லாத நிலையில் நாம் இருந்தோம். ஆனால் ஆளுங்கட்சியின் அராஜகத்தை எல்லாம் மீறி, நாம் கிட்டத்தட்ட 75% இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தோம்.

அதைத் தொடர்ந்து இப்பொழுது இந்தக் கிராமசபைக் கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். கிராமசபை என்று சொல்லக் கூடாது என்று அரசு உத்தரவு போட்டது.

நியாயமாக இந்த கிராமசபைக் கூட்டங்களை அரசு தான் நடத்த வேண்டும். இந்தப் பத்து ஆண்டுகளில் அவ்வாறு எதுவும் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், இதனை நடத்த விடாமல் அ.தி.மு.க ஆட்சி தடைபோடுகிறது.

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது, இதனை கிராமசபை என்று சொல்லக்கூடாது கிராம மாநாடு என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் தான் அதிகமாக உள்ளீர்கள்.

ஆண்கள் கூட குறைவாகத் தான் இருக்கிறார்கள். உங்களை சுற்றி ஆண்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக, நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் முத்துசாமி அவர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்து இருக்கிறார். எந்த ஒரு விழாவாக இருந்தாலும், உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டும் ஆற்றல் திரு. முத்துசாமி அவர்களுக்கு உண்டு. அதேபோல்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, கோவை தொண்டாமுத்தூர், கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.

அந்தக் கூட்டங்களை எல்லாம் விஞ்சக் கூடிய அளவிற்கு இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெண்களிடத்தில் பெரிய மாற்றத்தைப் பார்க்கிறேன். பெண்கள் முடிவெடுத்து இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கு நான்கு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. வருகிற தேர்தலில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடத்தில் தான் அதிகமான நம்பிக்கை இருப்பதைப் பார்க்கிறேன். அந்த அளவிற்கு சிறப்பாக திரண்டு இருக்கிறீர்கள்.

திரு. முத்துச்சாமி அவர்களுக்கு துணை நின்று பணியாற்றி இருக்கக்கூடிய பணியாற்றியிருக்கக்கூடிய கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்திற்கு எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றால், இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் வருகிறது. தற்பொழுது எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். இதனை நான் சொல்வதற்கு காரணம், முதலமைச்சராக இருந்து அவர் பணியாற்றவில்லை.

அவர் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்று, அதுவும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருந்த பொழுது, அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். நாம் மறைந்த தலைவர் பற்றி அரசியல் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஜனநாயகத்தில் மறைந்த தலைவர் பற்றி விமர்சனம் செய்வது முறையல்ல. நமக்கும் அவருக்கும், கொள்கையில், இலட்சியத்தில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்பொழுதும் மரியாதை செய்வதுதான் நம்முடைய கடமை.

அவர் இறந்த பொழுது, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அதைக் கேள்விப்பட்டு ,என்னை அழைத்து, 'நீ சென்று முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கக்கூடிய ஜெயலலிதா அம்மையாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வா' என்றார். அவர் உத்தரவை ஏற்று நானும் மரியாதை செலுத்தி வந்தேன். இதுதான் திமுகவின் பண்பாடு. இதுதான் கலைஞரின் பண்பாடு.

அவர் இறந்ததற்கு பிறகு ஏற்கனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அவர் சட்டமன்றத்தில் என்னைப் பார்த்து சிரித்தார் என்பதற்காக, 3 மாதங்களில் அவர் பதவியைப் பறித்து விட்டார்கள். அதன்பின் சசிகலா அவர்கள் நானே முதலமைச்சராக வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

சசிகலா பதவிப் பிரமாணம் செய்து கொள்ள நான்கு நாட்கள் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே பல வருடங்களாக நடந்து பெற்றுக் கொண்டிருந்த, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருட சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்து விட்ட காரணத்தினால், அவர் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தண்டனை தண்டனை தான். குற்றம் குற்றம் தான். மற்ற மூன்று பேருக்கும் தண்டனை கிடைத்தது.

இந்த சூழ்நிலையில், சசிகலா அவர்கள் கூவத்தூரில் எம்.எல்.ஏ. அனைவரின் முன்னிலையில் யாரை முதலமைச்சர் ஆக்கலாம் எனப் பேசிக்கொண்டிருக்கும்போது, சசிகலா காலில் ஏதோ ஊர்ந்து வருவது போல தெரிந்தது. யார் என்று பார்த்தால் எடப்பாடி பழனிசாமி அவர்கள். நான் இதனை ஏதோ பேச்சுக்குச் சொல்லவில்லை. நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்த காட்சிகளைத்தான் சொல்கிறேன். இவ்வாறுதான் அவர் முதலமைச்சர் ஆனார்.

நேற்று நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், திமுக தொப்பியைப் போட்டுக் கொண்டு ஒரு பெண் வந்து உட்கார்ந்தார். அந்தப் பெண்ணை வேலுமணி அனுப்பி வைத்திருக்கிறார். வேலுமணியினுடைய ஊழல் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அந்த பெண் ஒரு கலகத்தை ஏற்படுத்தினார். அந்தப் பெண்ணை நம் தோழர்கள், கலைஞரின் உடன்பிறப்புகள், கட்டுப்பாடாக இருந்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவ்வாறு கட்டுப்பாடுள்ள கட்சி நம் கட்சி.

நான் அந்த பிரச்சனைக்கு இப்பொழுது அதிகம் செல்ல விரும்பவில்லை. பழனிசாமி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. மண்புழுவாக ஊர்ந்து சென்று அந்தப் பதவியைப் பெற்றவர். அவருக்கு இன்னும் நான்கு மாதங்கள் தான் அவகாசம் உள்ளது.

மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மக்கள் என்று சொல்வதை விட பெண்கள் முடிவெடுத்து விட்டீர்கள். இங்கே இருக்கக்கூடிய தாய்மார்கள் முடிவெடுத்து விட்டீர்கள். இதுதான் உண்மை.

இதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகம் 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது பெண்களுக்கு, சகோதரிகளுக்கு, தாய்மார்களுக்கு, பல்வேறு திட்டங்களை, சாதனைகளை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது செய்து காட்டியிருக்கிறார்.

சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஆரம்ப பள்ளிகளில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று சட்டம். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் என்றால் அந்தத் திருமணத்திற்கு உதவி செய்யக்கூடிய ஒரு அற்புதமான திட்டம். ஏழைக் குடும்பங்களில் பெண்களுக்கு திருமணம் என்றால், அதற்கு யாரிடம் கடன்வாங்கலாம் என பெற்றோர் பரிதவிப்பார்கள். அவர்களது துயரத்தைப் போக்குவதற்கான திட்டம்தான் திருமண உதவித் திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை. விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம்.

இப்படி பல திட்டங்கள். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும். சுயமாக வாழ்க்கை நடத்த வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு உருவாக்கிய திட்டம் தான், மகளிர் சுய உதவிக்குழு திட்டம்.

1989இல் தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். சுழல்நிதி, வங்கிக் கடன் தொகை இது எல்லாம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஏனென்றால், அவர்கள் சுயமாகத் தொழில் செய்து அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். தன்னந்தனியாக வாழ்க்கை நடத்த கூடிய அளவு ஆற்றலை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த திட்டத்தை கொண்டு வந்தவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்.

அப்போது நான் தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் இருந்தேன். துணை முதலமைச்சராக இருந்தாலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டு இருந்தேன். அந்த உள்ளாட்சித்துறையின் கீழ்தான் மகளிர் சுயஉதவிக் குழு ஒப்படைக்கப்பட்டது. நான் அந்த பொறுப்பை ஏற்று அந்த பணியை எப்படி எல்லாம் செய்தேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஒவ்வொரு மாதமும், ஒரு நான்கு மாவட்டத்திற்கு செல்வேன். அப்பொழுது நடக்கிற அரசு நிகழ்ச்சிகளில் சுய உதவிக்குழுவிற்கு என்று தனி நிகழ்ச்சி நடைபெறும். சுழல்நிதி, மானியம், வங்கிக்கடன் ஆகியவற்றை அத்தனை பேருக்கும் முழுமையாக இருந்து கொடுத்து விட்டுத்தான் சென்று இருக்கிறேன்.

ஏனென்றால், அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ, அதிகாரிகளோ பணிப்பளு காரணமாக சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டுச் சென்று விடுவார்கள். அது முழுமையாக சென்று சேராமல் சென்றுவிடும். அதனால்தான் நேரில் நானே அதை வழங்குவேன். காலை 10 மணிக்கு ஆரம்பித்தால் மாலை 4 மணி வரைக்கும் நின்ற இடத்தில் நின்று கொண்டு அவர்களுக்கு அந்தச் சுழல் நிதி, வங்கிக் கடன் இவற்றை எல்லாம் கொடுத்திருக்கிறேன். எதற்காக சொல்கிறேன் என்றால், ஏதோ என்னுடைய பெருமைக்காக அல்ல. கலைஞருடைய எண்ணத்தை, கலைஞருடைய உணர்வை நாம் எப்படி எல்லாம் வெளிப்படுத்தினோம், நாம் அதை எப்படி எல்லாம் செயல்படுத்தினோம் என்பதற்கு அந்த நிகழ்வுகளே உதாரணம்.

பெண்களுடைய முன்னேற்றத்திற்காக அற்புதமான திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. இல்லை என்று சொன்னாலும், இதோ இங்கே சிலை வடிவமாக நம் முன்னால் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். வங்கக் கடலோரத்தில், அண்ணாவிற்கு அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் எந்த லட்சியத்தோடு, எந்த உணர்வோடு, நம்மைப் பயிற்றுவித்து இந்த அரசியல் நமக்கு கற்றுத் தந்திருக்கிறாரோ அந்த வழியில் நின்று நாமும் நாமும் கடமையாற்ற இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த உறுதியை உங்கள் முன்னால் எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கில், பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேச வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. ஆனால், அத்தனை பேரும் பேசினால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்.

ஏற்கனவே 10 பெயர்களை உங்களைக் கேட்டு தயார் செய்துள்ளோம். அவர்களும் தயார் நிலையில் வந்திருக்கிறார்கள். உங்களின் கருத்துகளை இந்த 10 பேர் சொல்லப்போகிறார்கள். அதை நாங்கள் குறித்து வைத்துக்கொண்டு அதற்கு உரிய நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு அதையெல்லாம் உடனுக்குடன் செய்து தரக்கூடிய முயற்சியில் ஈடுபடுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இப்பொழுது அவற்றைச் சுருக்கமாகச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+