தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சென்னை: ''தமிழக பள்ளிகளில் விபூதி, குங்குமம் வைத்துவிட்டு செல்ல தடையா? என்பது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்மோகன். கடந்த 12ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ''ஜாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது. பிரிவினையை தூண்டக்கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் அனுமதி கிடையாது'' என்று கூறினார்.
மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் கூறியதை பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி அவர், ''இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? கல்வி கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கையில் எந்த கயிறும் கட்டக்கூடாது என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பை கக்கி உள்ளார். இதன்மூலம் திமுகவின் 'பி டீம்' என்பதை அவர் மீண்டும் நிரூபித்துவிட்டார்.
பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், க்டசிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா? மதசார்பின்மை என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது'' என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதுபற்றி இன்று மதுரையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. நிருபர் சார்பில், ''கல்வி கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க கூடாது என்று நீங்கள் கூறியதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளது. அனுமதிக்க மாட்டீர்கள் என்றால் திமுகவின் 'பி டீமா' என்று கேட்கிறார்'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராஜ்மோகன், ''என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் சொன்னது என்னவென்றால்.. அப்போது நிருபர் என்னிடம் ஒரு சில இடங்களில் சென்சிட்டவாக மாணவர்கள் இடையே ஜாதிய மோதலை தூண்டி விடுகிறார்கள். கையில் அணியும் பேண்ட்களில இந்த நிறத்துக்கு இந்த சமூகம் என்று வெளியில் இருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள். இதையெல்லாம் அனுமதிக்க கூடாது என்று தான் கூறினேன்.
மற்றபடி எது வழக்கத்தில் இருந்ததோ அது அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நானே விபூதி, குங்குமம் வைத்துவிட்டு தான் பள்ளிக்கூடம் செல்வேன்'' என்றார். இதன்மூலம் பள்ளிகளில் விபூதி, குங்குமம் வைக்க எந்த தடையும் இல்லை என விளக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications