Fact Check: திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னாரா விஜய்? போலி அறிக்கை! உண்மை என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அவர் பெயரில் ஒரு அறிக்கை இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இந்த அறிக்கை போலியானது எனத் தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக ஊடகங்களை குறி வைத்து போலி செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
விஜய் அரசியல் கட்சி: கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியல் களத்தில் இறங்கப் போவதாகவும், மக்களவைத் தேர்தலில் தான் பங்குபெறப் போவதில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்றும் நடிகர் விஜய் அறிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்றாலும், அரசியல் விவகாரங்கள் தொடர்பான கருத்துகளை அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார் விஜய். தனது கட்சிப் பெயரில் தனியாக தொடங்கிய சமூக வலைதளப் பக்கங்களில் கட்சி தொடர்பான அறிவிப்புகள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் விஜய்.
திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றாரா விஜய்?: அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என விஜய் தெரிவித்து உள்ளதாக ஒரு அறிக்கை, விஜய் வழக்கமாக வெளியிடும் லெட்டர் ஹெட்டில் இருப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், 'வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள் யார் என்று மனதில் வைத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, திராவிட பிரிவினை வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேக்கிங் நியூஸ் :-- நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள். பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று வேண்டுகோள். தேசிய வளர்ச்சிக்கு பாடுபடும் கட்சிக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்து உள்ளார். 🖕🖕🖕👍👍👍👍👍 pic.twitter.com/XmxehYtGLT
— Saravanan Dgl(மோடியின் குடும்பம் ) (@ksn_dgl) April 2, 2024
உண்மை என்ன?: திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று விஜய் அறிக்கை வாயிலாக தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டிருந்தனர். விஜய் இப்படி தெரிவிக்கவில்லை என்றும், இந்த அறிக்கை போலியானது என்றும் பலர் பதிவிட்டிருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால், விஜய் இப்படி எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் அவரது அறிக்கை வெளியிடப்படும். இந்த குறிப்பிட்ட அறிக்கை அதில் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இதுபோன்று புதிய வார்த்தைகளைச் சேர்த்து எடிட் செய்து விஷமிகள் பரப்பி வருவது தெரியவந்துள்ளது. வழக்கமான எழுத்துருவில் இல்லாமல் வித்தியாசமானதாக இந்த அறிக்கை உள்ளது. விஜய் பெயரில் போலியாக விஷமிகள் யாரோ உருவாக்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை அது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உறுதி செய்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
நடிகர் விஜய், தமது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திராவிட பிரிவினை வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
முடிவு
விஜய் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட அறிக்கை, அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications