அம்மாடியோவ்.. வெறும் 19 நாளில் இரட்டை கோபுரத்தை கட்டி முடித்த சீனா? பரவும் போட்டோ! உண்மை இதுதான்!
சென்னை: சீனாவில் வெறும் 19 நாளில் 57 மாடிகளுடன் வானத்தை தொடும் அளவுக்கு பிரமாண்டமாக இரட்டை கோபுரம் கட்டப்பட்டுள்ளதாக இணையதளங்களில் போட்டோவுடன் செய்திகள் பரவி பிரமிக்க வைத்து வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சீனா.. நமது அண்டை நாடான சீனா மர்மங்கள் நிறைந்த தேசமாகவே கருதப்படுகிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரு வழியில் பயணித்தால் சீனா குறுக்கு வழியில் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்தியாவுடன் எல்லையில் வாலாட்டி வரும் சீனா, அமெரிக்காவையும் எதிர்த்து வருகிறது. குறிப்பாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமெரிக்கவையே உளவு பார்த்தது.
இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியதாக பல நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. சீனாவில் ஒற்றை ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். இவரது தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உள்பட பல திட்டங்களை வெளியுலகிற்கு பகிர வேண்டிய தேவை இருப்பினும் சீனா அதனை மறைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இத்தகைய சூழலில் தான் தற்போது இணையதளங்களில் ஒரு போட்டோ வேகமாக பரவி வருகிறது. அதாவது சீனாவில் 57 மாடிகளுடன் இரட்டை கோபுரங்கள் 19 நாளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே என்ஜினீயரிங்கின் அதிசயம். இந்த அதிசயத்தால் தான் வானத்தை எட்டும் அளவிலான பிரமாண்டமான இரட்டை கோபுரம் 19 நாளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் பலரும் இந்த போட்டோவை இணையதளங்களில் பகிர்ந்து பிரமித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் பலரும் சந்தேகம் தெரிவித்தனர். இதுபற்றி இணையதளங்களில் ஆய்வு செய்து பார்த்தபோது தான் அந்த கட்டடத்தின் பின்னணி தகவல் முழுமையாக தெரியவந்தது. அதாவது உண்மையில் அந்த கட்டடம் என்பது சீனாவில் இல்லை. மாறாக அது பிரேசில் நாட்டில் உள்ளது. அந்த கட்டடத்தின் பெயர் "யாட்ஹவுஸ் ரெசிடென்ஸ் கிளப்" என்பதாகும். இது பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள புளூமெனாவ் நகரின் அருகே கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டடம் பிரேசிலில் கட்டி முடிக்க 8 ஆண்டுகள் ஆகியுள்ளது. கடந்த 2012ல் இந்த கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. 2014ம் ஆண்டில் இந்த கட்டடம் கட்டும்பணி தொடங்கியது. கடந்த ஆண்டு 2022ல் பணி முழுமையாக முடிவடைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கோபுரத்தில் பிரேசில் கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், கேப்டனுமான நெய்மரும் வீடு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதோடு கூகுள் மேப் மூலம் புளூமெனாவ் நகரை சர்ச் செய்து பார்த்தாலும் அந்த கட்டடம் தெரிகிறது.இதன்மூலம் இந்த இரட்டை கோபுரம் கட்டடம் சீனாவில் 19 நாட்களாக கட்டப்பட்டுள்ளது என்பது பொய்யான செய்தி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தற்போது பரவி வரும் போட்டோ என்பது கடந்த 2018 ல் எடுக்கப்பட்டதும், அந்த காலக்கட்டத்தில் கட்டுமான பணி நடந்ததால் மேல்தளத்தில் பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அப்போது எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ, போட்டோக்கள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை தான் இணையதளங்களில் போலியாக சீனா பெயரில் பரவி வருவது தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
சீனாவில் வெறும் 19 நாளில் 57 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
முடிவு
இந்த இரட்டை கோபுரம் சீனாவில் இல்லை. இது பிரேசில் நாட்டில் உள்ள புளூமெனாவ் நகரில் உள்ளது. இந்த இரட்டை கோபுரம் கட்டும் பணி கடந்த 2014ல் தொடங்கி 2022ம் ஆண்டில் முடிவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications