Fact Check: சமையல் கேஸ் சிலிண்டருக்கு.. தமிழக அரசு 55% வரி விதித்திருக்கிறதா? வேகமாக பரவும் வதந்தி
சென்னை: கேஸ் சிலிண்டர் விலை குறித்து அவ்வப்போது விவாதங்கள் வெடித்த கிளம்புகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சோஷியல் மீடியாவில் தமிழக அரசு கேஸ் சிலிண்டருக்கு அதிக வரி விதித்திருப்பதாக போலியான தகவல்கள் பரவி வருகிறது.
சமையல் எரிவாயு விலையேற்றம் கடந்த சில வருடங்களாகவே மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் விறகுகளை கொண்டு சமையல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இது மாறி இப்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலையானது இறக்குமதி சமன் விலை (import parity price)அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தை விலை, ஃப்ரீ ஆன் போர்ட் விலையானது, கடல் சரக்கு போக்குவரத்து செலவு, காப்பீடு செலவு, சுங்க வரிகள், துறைமுகக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதோடு உள்நாட்டில் செய்யப்படும் போக்குவரத்து செலவுகள், சந்தைப்படுத்தல் செலவு, எண்ணெய் நிறுவனங்களின் லாப சதவீதம், பாட்டலிங் செய்வதற்கான செலவுகள், டீலர்களுக்கான கமிஷன் மற்றும் ஜிஎஸ்டி இவையனைத்தையும் கணக்கில் கொண்டே பயன்பாட்டுக்கு வரும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் ஆகிறது. இது ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படும்.
எரிவாயுவைப் பொறுத்தவரை சவுதி அராம்கோ நிறுவனம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் சர்வதேச சந்தை விலை தீர்மானிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை உயரும்போது உள்நாட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயுவின் விலை உயரும். அதேசமயம் சர்வதேச விலையானது டாலரில் நிர்ணயிக்கப்படுவதால், ரூபாய் மதிப்பு சரிவை சந்திக்கும்போதும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதும், போர், நெருக்கடி சூழல்களில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் போதும் அது எரிவாயு சிலிண்டரின் விலையையும் உயர்த்துகிறது. இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 50 சதவீதம் இறக்குமதியை நம்பியுள்ளது. மீதமுள்ள 50 சதவீதம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக சர்வதேச சந்தை விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இப்படி இருக்கையில், தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்னவெனில், சமையல் எரிவாயு ஜி.எஸ்.டியின் கீழ் வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு 55% வரியை விதிப்பதாக கூறியிருப்பது முழுக்க முழுக்க வதந்தியாகும்.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது
முடிவு
சமையல் எரிவாயு ஜி.எஸ்.டியின் கீழ் வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications