Fact check: இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டாரா? உண்மை என்ன?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டதாக செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், அதனை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இது பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் PIB தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டு வருகிறது இந்தியா. இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை அடிக்கடி தாக்கி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன்கள் தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் இந்திய விமானப்படை (IAF) விமானிகளில் ஒருவரான ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங்கின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது. பரவும் போலிச் செய்தி குறித்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) விளக்கியுள்ளது.
உண்மை என்ன?
தவறான தகவலை பரப்பிய பதிவுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) நிராகரித்து, அது "போலியான தகவல்" என்று கூறியிருக்கிறது. மேலும், "இது பாகிஸ்தான் சார்ந்த சமூக ஊடகங்கள், இந்திய பெண் விமானப்படை விமானி, ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டதாகக் கூறுவதை பரப்பி வருகின்றன. இந்தக் கூற்று போலியானது" என்று விளக்கம் அளித்துள்ளது.

உலகில் மிகவும் சக்திவாய்ந்த போர் விமானங்களில் ஒன்றான ரஃபேல் ஜெட் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர் தான் ஷிவானி சிங். கடந்த 2020 ஆம் ஆண்டு ரஃபேல் படையில் சேர்ந்த இவர் தற்போது அம்பாலா விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் அவரது புகைப்படத்துடன் தவறான செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

Fact Check
வெளியான செய்தி
இந்திய விமானப்படை அதிகாரி ஷிவானி சிங்கை பாகிஸ்தான் சிறைபிடித்தது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
முடிவு
இது பாகிஸ்தானால் பரப்பப்படும் போலிச் செய்தி என இந்திய விமானப்படை மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications