நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மூழ்கடித்த தாமிரபரணி வெள்ளம்? எவ்வளவு தண்ணீர் பாருங்க! உண்மை என்ன?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் முதல் இன்று 3 வது நாளாக மழை கொட்டி வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வெள்ளத்தில் மூழ்கியதாக இணையதளங்களில் வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றி மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலியில் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று 3வது நாளாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 235 மிமீ, நாலுமுக்குவில் 220 மிமீ, காகாச்சியில் 192 மிமீ, மாஞ்சோலையில் 179 மிமீ, பாபநாசத்தில் 149 மிமீ, சேர்வலாறு அணையில் 137 மிமீ, மணிமுத்தாறு பகுதியில் 94.80 மிமீ மழை பதிவாகி உள்ளது.
தொடர்ந்து இடைவிடாது மழை தொடர்ந்து கொட்டி வரும் சூழலில் திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருகிறது.
60,000 கனஅடியை தாண்டி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அதாவது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் திருநெல்வேலியில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில்தான் தற்போது பரவும் வீடியோவில் தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் மூழ்கி உள்ளதாகவும், தாமிரபரணி ஆற்றுக்கும், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்துக்கும் இடையே உள்ள சாலையில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதனை பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த தகவலை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ‛‛தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். மேலும் வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications