FACT CHECK: நபிகள் நாயகம் குறித்த அவதூறால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று அறிவித்தாரா மொயின் அலி?
சென்னை: நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்காக இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்திய கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிப்பேன் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தெரிவித்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்த பின்னணி மற்றும் உண்மை தகவலை பார்ப்போம்.

சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
டெல்லி, மும்பையில் வழக்கு

நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
கலவரம்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
“நபிகள் நாயகம் அவதூறு குறித்து மன்னிப்பு கேட்காவிட்டால் நான் கிரிக்கெட் விளையாட இந்தியா செல்லமாட்டேன்.” என மொயின் அலி பெயரில் @Moeen_Ali18 என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து ஆங்கிலத்தில் பதிவு வெளியானது.
முடிவு
அந்த ட்விட்டர் கணக்கின் முன்குறிப்பு (BIO) விலேயே அதிகாரப்பூர்வமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது விதிகளை மீறியதாகக் கூறி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தகவல் போலி என உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications