Fact Check: +1 படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2ஆம் ஆண்டு சேரலாமா? பரவிய தகவலுக்கு அரசு மறுப்பு!
சென்னை: 11 ஆம் வகுப்பு படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டு சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் வெளியிட்ட தகவல் உண்மை இல்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
+2 பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பாலிடெக்னிக்கில் நேரடி 2 ஆம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் இதனை மையமாக வைத்து ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

பொய்
"11 ஆம் வகுப்புப் படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டில் சேரலாம் என்ற புதிய தேசிய கல்விக்கொள்கையின் சாராம்சத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது" என்று காணொளி ஒன்றை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில் படித்த மாணவர்கள் மட்டுமே நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டில் சேர முடியும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்த வணிகவியல் மற்றும் கலைப்பிரிவு உட்பட அனைத்து மாணவர்களும் நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டில் சேரலாம் என்ற தளர்வைத் தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அண்மையில் அறிவித்தது.
11 ஆம் வகுப்பு படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டில் படிக்கலாம் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வதந்தியைப் பரப்பாதீர்!" என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
+1 படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டில் சேரலாம் என்ற புதிய தேசிய கல்விக்கொள்கையின் சாராம்சத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக தகவல் பரவியது.
முடிவு
11 ஆம் வகுப்பு படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2 ஆம் ஆண்டில் படிக்கலாம் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications